நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள அமர்கொண்டா முர்கதங்கல் நிலக்கரி பிளாக்கை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பான குற்றப்பத்திரிகையில், தொழிலதிபர் நவீன் ஜிண்டால், முன்னாள் முதல்வர் மது கோடா, நிலக்கரித்துறை முன்னாள் இணை மந்திரி தாசரி நாராயண் ராவ், நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் லிமிடெட் மற்றும் ஜிண்டால் ரியால்ட்டி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட 5 நிறுவனங்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நவீன் ஜிண்டால் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு வழங்கியபோது, நிலக்கரித் துறை அமைச்சர் பொறுப்பை மன்மோகன் சிங் கவனித்து வந்ததால் அவரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று மதுகோடா மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, மதுகோடாவின் கோரிக்கைக்கு தாசரி நாராயண் ராவ் ஆதரவு தெரிவித்தார். அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் இதனை தெரிவித்தார். மேலும், ஜிண்டால் குழும நிறுவனங்களுக்கு மன்மோகன் சிங் சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததாகவும் அவர் கூறினார். நவீன் ஜிண்டால் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜு, மதுகோடாவின் மனுவுக்கு ஆதரவாகவும் பேசவில்லை, எதிர்க்கவும் இல்லை. எனினும், கோடா மனு மீது ஏதாவது தீர்ப்பு வழங்கப்பட்டால், அது குற்றம்சாட்டப்பட்டவருக்கு பாரபட்சமாக இருந்துவிடக்கூடாது என்று குறிப்பிட்டார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.