கோவை ஜி.டி.மியூசியத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த, மூன்று சக்கர பெட்ரோல் கார், நேற்று சாலை மார்க்கமாக சென்னைக்குப் புறப்பட்டது. 1886ல் ஜெர்மனியைச் சேர்ந்த பொறியாளர் கார்ல் பென்ஸ், மோட்டார் வேகன் காரை உருவாக்கினார். பெட்ரோலில் இயங்கும் வகையில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட, மூன்றுச் சக்கர மோட்டார் வாகனத்துக்கு, அவர் காப்புரிமை பெற்றார். பென்ஸ் மனைவி பெர்தா, காரை சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதே மாடலில் கோவை ஜி.டி. நாயுடு, 86 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய மூன்று சக்கர மோட்டார் வாகனம், ஜி.டி., மியூசியத்தில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த காரில், கோவையிலிருந்து சென்னைக்குச் சாகசப்பயணம் மேற்கொள்ள, ஜி.டி.நாயுடு அறக்கட்டளையினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, நேற்று மாலை ஜி.டி.மியூசியம் வளாகத்தில் இருந்து சென்னைக்குப் பயணம் துவங்கியது. மகாராஷ்டிர மாநிலம் இந்து சமஸ்தான அரச குடும்பத்தைச் சேர்ந்த, மன்வேந்திரசிங் பயணத்தைத் துவக்கி வைத்தார். இந்தப் பயணம்தான் மோட்டார் வேகன் காரின் நெடுந்தூரப் பயணமாக இருக்கும் என்கின்றனர் ஜி.டி. அறக்கட்டளை நிர்வாகிகள். இன்று இரவு, 10:45 மணிக்கு வேகன் கார், சென்னையைச் சென்றடையும். என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாகச பயணத்தின் நிறைவு விழா, நாளை மாலை, 5:00 மணிக்கு சென்னை தாஜ் ஓட்டலில் நடக்கிறது. ஜி.டி.நாயுடு மகன் கோபால் கூறுகையில், இந்தியா உலக நாடுகளுடன் தொழில்நுட்ப ரீதியாக போட்டியிட முடியும் என்பதை உணர்த்தும் வகையில், இந்த சாகசப்பயணம் இருக்கும், என்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.