Show all

பாஜக நோக்கத்தைப் பட்டெனப் போட்டுடைத்த பாபாஇராம்தேவ்! எகிறியடித்தலை தலைப்பாக்கி வரும் பெரியார் தொண்டர்கள்

பெரியார் அவர்களின் கருத்துக்களை, ‘அறிவுசார் பயங்கரவாதம்’ என்ற பாபாஇராம்தேவ் தனது ‘மடமைசார் பயங்கரவாதக்’ கருத்தியலை வெளியிட்டுள்ள நிலையில், இணையத்தில் தங்கள் எகிறியடித்தலை தலைப்பாக்கி வருகின்றனர் பெரியார் தொண்டர்கள்

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: “பெரியாரைப் பின்பற்றுபவர்கள் வளர்ந்து வருகின்றனர். கடவுளை நம்புகிறவர்கள் முட்டாள் என்று பெரியார் கூறுகிறார். கடவுளை மிகப்பெரிய பிசாசு என்கிறார். லெனின், மார்க்ஸ் ஒருபோதும் இந்த நாட்டிற்கு சிறந்த மனிதர்களாக இருக்க முடியாது. அம்பேத்கரை பின்பற்றுவதாக கூறும் சிலர் பிளவை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். நான் அவர்களுக்காக ஒரு சொல்லை உருவாக்கியுள்ளேன், அதுதான் ‘அறிவுசார் பயங்கரவாதம்’ இவ்வாறான கருத்தியல் பயங்கரவாதத்துக்கு எதிராக சட்டங்களை உருவாக்க வேண்டும்” இவ்வாறு பேசியிருந்தார் பாபாஇராம்தேவ்.

பாபாஇராம்தேவின் இந்த ‘மடமைசார் பயங்கரவாதம்’ ஆகிய கருத்தியல் பயங்கரவாதத்திற்கு எதிராக- பாபா ராம்தேவுக்கு எதிராக- இணையத்தில் எகிறியடித்தலை தலைப்பாக்கி வருகின்றனர் பெரியார் தொண்டர்கள்

பாபா ராம்தேவ் கைது செய்யப்பட வேண்டும் என சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பாபா ராம்தேவ் பேசிய காணொளியைப் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக சமூக செயற்பாட்டாளர், வித்யா பூஷண் ராவத் தன் கீச்சுப் பக்கத்தில், “அம்பேத்கர் மற்றும் பெரியாரை சரியாக படித்திருந்தால் பாபா ராம்தேவ் பயனடைவார்.

பாபாஇராம்தேவ் சக்தி வாய்ந்த மக்களின் கைகளின் உள்ள ஒரு கருவி. இவரைப் பயன்படுத்தும் வரை பயன்படுத்திவிட்டு தனிமையில் விட்டு செல்வார்கள். இராம்தேவ் தன் கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யவிட்டால் சமூக நீதி மற்றும் சுய மரியாதையை நம்பும் மக்கள் அவரது தயாரிப்புகளைப் புறக்கணிக்க வேண்டும்” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

பாபாஇராம்தேவ், தொடங்கிய பதஞ்சலி நிறுவனத்தின் இன்றைய சொத்து மதிப்பு சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய். நாடாளுமன்ற தேர்தலில் தலைமைஅமைச்சர் பதவிக்கு முன்மொழியப்பட்ட மோடிக்காக, நாடு முழுவதும் கருத்துப்பரப்புதல் செய்தார். மறைந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி கொண்டு வந்த சரக்குசேவை வரி போன்ற திட்டங்களுக்கு, பாபாஇராம்தேவ் ஆதரவு தெரிவித்தார். இவரது ஆலோசனைப்படியே பாஜக தலைவர் அமித்ஷா யோகா மற்றும் ஆயுர்வேத முறைகளை பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பார்ப்பனிய மேலாதிக்க ஹிந்துத்துவா அரசியலில் கவனம் செலுத்திவரும் பாபாஇராம்தேவ், அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் குறித்து, பேசியதில் தான் கொண்டாடும் பாஜக நோக்கத்தைப் பட்டெனப் போட்டுடைத்துள்ளார். 

இதுபோல், ஹரித்வாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாபாஇராம்தேவ், இராமர், கிருஷ்ணர் காலம் முதல் உயர்சாதியினர் ஆண்டு வந்ததாகவும், அதன்பிறகு ஆதிதிராவிட மக்களும், இஸ்லாமியர்களும் வந்தனர், என்றும் குறிப்பிட்ட பாபா ராம்தேவ், பின்னர் மக்களை பெரியார் தவறாக வழிநடத்தியதாகவும் விமர்சித்திருந்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,340.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.