‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தில் பங்கேற்குமாறு, சீன
முதலீட்டாளர்களுக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்தார். நான்கு நாள் பயணமாக
சீனா சென்றுள்ள பிரணாப் முகர்ஜி, குவான்சூ நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியா-சீனா
வர்த்தக அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றார். சீன மற்றும் இந்திய தொழிலதிபர்கள் கலந்துகொண்ட
அக்கூட்டத்தில், அவர் பேசியதாவது: இந்திய பொருள்களுக்கான
பெரிய சந்தையாக, சீனா விளங்க வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. மருந்துகள் உற்பத்தி,
தகவல் தொழில்நுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க
வேண்டிய அவசியம் உள்ளது. சீனாவின் குவாங்டான்
மாகாணம், உற்பத்தித் துறையிலும், ஏற்றுமதியிலும் சிறந்து விளங்குகிறது. இந்த மாகாணத்துக்கும்,
தமிழகத்தில் காஞ்சிபுரத்துக்கும் இடையே 2-ஆம் நூற்றாண்டிலேயே
கடல் வழியாக வணிக தொடர்புகள் இருந்துள்ளன. பாரம்பரிய மிக்க இந்திய-சீன உறவை, மீண்டும் வலுப்படுத்த வேண்டிய
தருணத்தில் இருக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், கடந்த 2000-ஆம் ஆண்டில்
2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.19 ஆயிரம் கோடி) இருந்தது.
தற்போது, இது 71 பில்லியன் அமெரிக்க டாலர்களாக (சுமார் ரூ.4 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இந்தியாவில் தொழில்
தொடங்குவதை எளிமைப்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம்,
அந்நிய முதலீடுகள் 32 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், சர்வதேச அளவில் முதலீட்டுக்கான
மிகப்பெரிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. தொழில் மற்றும் வர்த்தகத்
துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இந்தியா தயாராக இருக்கிறது. ‘இந்தியாவில்
தயாரிப்போம்’ ‘100 பொலிவுறு நகரங்கள்’ உள்ளிட்ட திட்டங்களில் சீன முதலீட்டாளர்கள்
பங்கேற்க வேண்டும். இந்திய ரயில்வே மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் சீனாவின் ஒத்துழைப்பு
அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார் பிரணாப் முகர்ஜி.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.