Show all

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடுவண் அரசு பிறப்பித்த அறிக்கை சரியானது: தமிழக அரசு

     தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக நடுவண் அரசு வெளியிட்ட அறிக்கை சரியானதே என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் தடை விதித்திருந்தது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடுவண் அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனக் கூறி பிராணிகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு மீண்டும் நீதிமன்றத்திற்குப் போனது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து நடுவண் அரசு வெளியிட்ட அறிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

 

இத்தடையால் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தடையை எதிர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தப்பட்டன. இதனையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் நடுவண் அரசின் உத்தரவு தவறானது என விலங்குகள் நல வாரியத்தினர் வாதிட்டனர். இதனால் பதில் மனுத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கு விசாரணை வரும் 15-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று தமிழக அரசு பதில் மனுவைத் தாக்கல் செய்ததுள்ளது.

 

அதில், தமிழ்ப்பண்பாட்டு நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டிக்கும் மற்ற விளையாட்டுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடுவண் அரசு பிறப்பித்த அறிக்கை சரியானது என்றும் ஜல்லிக்கட்டின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.