டெல்லியில் அளவுக்கு அதிகமாக உள்ள காற்று மாசுபாட்டை
கட்டுப்படுத்தும் வகையில் டெல்லி மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு
அங்கமாக ஒற்றைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஒற்றைப்படை தேதிகளிலும், இரட்டைப்படை எண்கள்
கொண்ட கார்கள் இரட்டைப்படை தேதிகளிலும் சாலையில் செல்ல அனுமதிக்கும் திட்டத்தை ஜனவரி
1-ம் தேதி முதல் 15 வரை டெல்லி அரசு அறிமுகப்படுத்தியது. அப்போது, பெண்களால் ஓட்டப்படும் கார்கள், மாற்றுத்திறனாளிகள்,
ஆம்புலன்சு வண்டிகள், தீயணைப்பு வண்டிகள், ஆட்டோ ரிக்ஷா, பஸ்கள், இரு சக்கர வாகனங்கள்
மற்றும் வி.ஐ.பி. வாகனங்களுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.
அதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. சோதனை முயற்சியாக இந்தத் திட்டம் மேற்கொள்ளப்படும்
என்று டெல்லி அரசு அறிவித்திருந்தது. இந்தச் சோதனை முயற்சிக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில், ஒற்றைப்படை இரட்டைப்படை கார்கள் திட்டத்தின்
அடுத்த சோதனை முயற்சி ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த்
கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 15 நாட்களுக்கு இந்த சோதனை முயற்சி அமல்படுத்தப்படும்
என்று கூறப்பட்டுள்ளது. முதற்கட்ட சோதனை முயற்சி குறித்து டெல்லி அரசின்
இணையதளம் மூலம் மக்களிடம் கேட்கப்பட்டதில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கெஜ்ரிவால்
கூறினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.