ஒபாமா இந்தியாவில் குடியேறினாலும் ஆச்சரியம் இல்லை- சிவசேனை
கிண்டல் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தால் ஒபமா இந்தியாவில்
குடியேறினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என சிவசேனை கிண்டல் செய்துள்ளது. இதுதொடர்பாக, அக்கட்சியின் நாளேடான, சாம்னாவில் வௌ;ளிக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடியின் உற்ற தோழனாக ஒபாமா மாறிவிட்டார். அவர்களுக்கு
இடையே ஆழமான நட்பு நீடிக்கிறது. கடந்த காலங்களில் ஒரு அமெரிக்க அதிபரிடம் இருந்து வேறு
எந்த இந்தியப் பிரதமரும் இதுபோன்ற அன்பைப் பெற்றதில்லை. அதனால், ஒபாமா தனது பதவிக் காலம் முடிந்தவுடன் தனது குடும்பத்தினருடன்
தில்லி அல்லது சூரத், ராஜ்கோட், போர்பந்தர் ஆகிய நகரங்களுக்கு குடிபெயர்ந்தாலும், ஆச்சரியப்படுவதற்கு
ஏதுமில்லை. இக்கட்டான நேரங்களில் உதவி செய்ததற்காக, அமெரிக்காவுக்கு பிரதமர்
மோடி நன்றி தெரிவித்தது, மரியாதை நிமித்தமான பேச்சாகும். அதே அமெரிக்காதான், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதியுதவி
வழங்கி உதவி செய்வதை நிறுத்தாமல் உள்ளது. இந்தியாவின் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி
செய்யும் அமெரிக்கா, மறுபுறம் பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை விற்பனை செய்கிறது. பதான்கோட் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஒரு எதிரி (பின்லேடன்) பதுங்கியிருக்கும் ஒரு நாட்டுக்குள்
(பாகிஸ்தான்) புகுந்து அவரை அமெரிக்கா சுட்டுக் கொன்றது. ஆனால், இந்தியாவுக்கு ஆதரவாக
எச்சரிக்கையை மட்டுமே விடுக்கிறது. அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டை புரிந்துகொள்ள வேண்டும் என்று
அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.