Show all

நீட்தேர்வுதேவையேயில்லை! கோபம்கொப்பளிக்கும் கருத்துக்கள்- அனல்தெறிக்கும் ஆலோசனைகள்- திரும்பப்பெறுமா அரசு?

மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வான நீட்தேர்வு- ஏழை மாணவர்களுக்கு எதிரானதாக உள்ளது என, சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்து, திரும்பப் பெறலாமே அரசு என்று ஆலோசனை வழங்கியிருந்த நிலையில்- கோபம்கொப்பளிக்கும் கருத்துக்கள்- அனல்தெறிக்கும் ஆலோசனைகள்- நீட்தேர்வுதேவையேயில்லை! திரும்பப்பெறுமா அரசு? என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வான நீட்தேர்வு- ஏழை மாணவர்களுக்கு எதிரானதாக உள்ளது என, சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்து, திரும்பப் பெறலாமே அரசு என்று ஆலோசனை வழங்கியிருந்தது. 

அதனை உற்சாகமான முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு, அதிகாரிகள், அறிஞர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரும், நீட்தேர்வுதேவையேயில்லை! என்பதாக கோபம்கொப்பளிக்கும் கருத்துக்களையும், அனல்தெறிக்கும் ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றார்கள். இந்த நிலையில், தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுவாக ஒலிக்கிறது.

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்அறங்கூற்றுமன்றம், தனியார் கல்லூரிகள் மருத்துவ இடங்களை விற்று பெரும் லாபம் சம்பாதிப்பதைத் தடுப்பதாகக் கூறிக்கொண்டு- ஏழை மாணவர்கள் சமமான போட்டியில் பங்குபெறவேண்டும் என்பதாக கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு, தற்போது தனியார் பயிற்சி மையங்கள் கொள்ளை லாபம் அள்ளிக் குவிக்க வழிவகுத்துவிட்டது என்றும் கூறியது.

பயிற்சி மையங்கள் செல்லாத மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றிபெறுவதில் கடும் சவால் இருப்பதை சுட்டிக்காட்டிய அறங்கூற்றுமன்றம், இந்தக் கட்டாயத் தேர்வை ஏன் திரும்பப்பெறக்கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில்- அறங்கூற்றுமன்றத்தின் கருத்துக்கள் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுசேர்த்துள்ளது. அந்த அடிப்படையில் கீழ்க்கண்ட கருத்துக்களும், ஆலோசனைகளும், கோரிக்கைகளும் முன்வைக்கப் படுகின்றன.

(!) மருத்துவராகப் பணியாற்ற வேண்டும் என எண்ணுபவர்களுக்கு அர்ப்பணிப்பு உணர்வும், எல்லா உயிர்களுக்கும் உதவவேண்டும் என எண்ணமும்தான் தேவை. அதனை நீட் தேர்வு என்ற அளவுகோலால் அளக்க முடியாது. நீட் போன்ற தேர்வு முறையால் சிறந்த மருத்துவரை உருவாக்க முடியாது. தேர்வு மதிப்பெண்ணை கொண்டு அலுவலக வேலைகளுக்கு ஆட்களை தேர்வு செய்வது போன்ற துறை மருத்துவத் துறை அல்ல.

(!) கட்டாய நீட்தேர்வின் அடிப்படையில் மாணவர்களைத் தேர்வு செய்வதால் பயனில்லை என்றும், ஏழை மாணவர்களின் மருத்துவ கனவைக் குலைப்பதாக நீட் தேர்வு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

(!)  நான்கு ஆண்டுகளுக்கு மேல் மருத்துவப் படிப்பு முடித்து, ஓர் ஆண்டு பயிற்சி பெற்ற ஒருவர்தான் மருத்துவராக வேலையை தொடங்குகிறார். அந்த நபர் ஒரு நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து, அவர் அந்த துறைக்கு ஏற்றவர் என தேர்வு செய்வது சரியல்ல.

(!) முன்னர் இருந்த நடைமுறையில்12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுப்பவர்களுக்குத்தான் மருத்துவ இடம் கொடுக்கப்படும் என்பதில் எந்த குழப்பமும் இல்லை. ஆனால் நீட் தேர்வில் இந்திய இடைநிலைக்கல்வி வாரியப் பாடத்திட்ட முறையில் கேள்விகள் இருப்பதால், மாநில பாடத்திட்டத்தைப் படிக்கும் மாணவர்களுக்கு சிக்கலே. 

(!) ஒரே விதமான பாடத்திட்டத்தை இந்திய முழுவதும் முன்னெடுக்கக் கூடாத நிலையில், வெவ்வேறு பாடத்திட்டங்களைப் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தேர்வை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ இடம் வழங்குவது நியாயமற்றது.

(!)  நீட் தேர்வில் மூன்று முறை தேர்வு எழுதலாம் என்பதால், அதற்கு தனியார் பயிற்சி மையத்தில் பெரிய தொகையை கட்டி படிக்கிறார்கள். இப்படி படிப்பவர்கள் குறைந்தபட்சம் மூன்று லட்சம் வரை ஒரு ஆண்டுக்கு செலவு செய்ய நேரிடும். ஏழை மாணவர்களுக்கு இது சாத்தியமில்லாதது. முதல் முறை தேர்வு எழுதுபவர்களோடு, இரண்டு, மூன்றாவது முறை தேர்வு எழுதுபவர்கள் போட்டியிடுவதால், நீட் தேர்வு சமமான போட்டி இல்லவே யில்லை.

(!)  இவ்வளவு அதிகமான பணத்தை செலவு செய்து படிப்பவர்கள் அரசு வேலைக்கு சேருவதற்கான சாத்தியம் எப்படி இருக்கும்? தனியார் மருத்துவர்களாக பலரும் வேலை செய்யத் தொடங்கிவிட்டால், விரைவில், அரசாங்க மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு நிலவும். இதனால் வட மாநிலங்களைப் போல தமிழக மருத்துவமனைகளில் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் சூழல் உருவாகும். 

(!) கட்டாய நீட்தேர்வு தொடர்ந்தால் அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையை படிப்படியாக அது குறைக்கும். 

(!) தமிழகத்தின் இலவச மதிய உணவு திட்டத்தை சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்புதான் வடமாநிலங்கள் புரிந்துகொண்டு தற்போது பின்பற்றுகிறார்கள். அதே போல, இந்திய அளவில் மருத்துவத் துறையில் சிறந்துவிளங்கும் தமிழக மாதிரியைப் பின்பற்றாமல், நீட் கட்டாயத்தேர்வை கொண்டுவந்து இங்குள்ள ஆரோக்கியமான சூழலை கெடுக்கிறார்கள்.

(!)  நீட் தேர்வில் கேள்விகளில் பிழைகள் இருந்தபோதும் அதற்கான மதிப்பெண்கள் கொடுக்கப்படவில்லை. தவறான தேர்வு முறையை கொண்டு சிறப்பான மருத்துவர்களை எப்படி உருவாக்கமுடியும்? இப்படி பல்வேறு கருத்துக்கள், அலோசனைகள், கோரிக்;கைகளை- துறை வல்லுனர்கள், அதிகாரிகள், அறிஞர்கள், மருத்துவர்கள், கல்வியாளாகள் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகிறார்கள் பல்வேறு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் இந்தக் கருத்துக்கள் தீயாகி வருகின்றன.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,327.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.