சட்டசபை தேர்தலைக் கருத்தில் கொண்டு மக்களை முட்டாளாக்க நிதிஷ் குமார் முயன்றுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசினார். பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பீகார் மாநிலத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டங்களை அறிவித்து இருந்தேன். அதன்பின்னர் நிதிஷ்குமார் மாநில அரசின் நிதியில் 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கான சிறப்பு திட்டங்களை அறிவித்து இருக்கிறார். இந்த மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை முட்டாளாக்க நிதிஷ்குமார் முயற்சித்து வருகிறார். ஏற்கனவே அனைத்து வீடுகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அவர் அளித்த உறுதிமொழியை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அவருக்கு தேர்தலில் ஓட்டுகள் கிடைக்காது என்பதால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமலேயே மக்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்காக இதனை அவர் அறிவித்துள்ளார். இப்படி பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் அவரை மக்கள் நம்பத் தயாராக இல்லை. மின்சார அறிவிப்பை போலவே இந்த ரூ.2.70 லட்சம் கோடியும் ஒன்றுமில்லாத அறிவிப்பு தான். இவ்வாறு அவர் பேசினார். மேலும், லாலு பிரசாத் யாதவ், நிதிஷ் குமார் ஆகிய கட்சிகளின் 25 ஆண்டு கால ஆட்சியில், சாதி மத நச்சை மக்களிடையே பரப்பியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.