சாலை விபத்துக்களில் நாள் ஒன்றுக்கு 400 பேர் பலியாகின்றனர்.
அதில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்று நடுவண் அமைச்சர் நிதின் கட்கரி வருத்தத்துடன்
தெரிவித்து உள்ளார். இந்தியாவில் 2015 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள் தொடர்பான
அறிக்கையை, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டு
உள்ளார். அதனை வெளியிட்டு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, இந்த அறிக்கையின்படி, நாடு முழுவதும் 5 லட்சத்து ஓர் ஆயிரத்து
423 விபத்துகள் நேரிட்டுள்ளது. அதில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 671 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நாள்தோறும் 1,374 விபத்துகள் ஏற்படுவதாகவும், அதில்
சராசரியாக 400 பேர் பலியாவதாகத் தெரியவந்துள்ளது. மேலும் ஒரு மணி நேரத்தில் 57 விபத்துகள் ஏற்படுவதாகவும், அதில்
17 பேர் இறப்பதாகவும், ஒவ்வொரு 3.7 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், இது போன்ற
சாலை விபத்துக்களில் பலியாகும் நபர்களில் 54விழுக்காட்டு பேர் 15 முதல் 34 அகவைக்கு
உட்பட்டவர்கள் என்பதும் இந்த அறிக்கையின் மூலம் தெரிகிறது. இது மிகுந்த வேதனை அளிக்கக்கூடியதாகும். கடந்த ஆண்டில் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் 69,059 சாலை
விபத்துகள் நேரிட்டுள்ளன. சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை,
உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. 2015-ம் ஆண்டில், உத்தரபிரதேசத்தில் சாலை விபத்துகளில்
17,666 பேர் உயிரிழந்துள்ளனர். நகரங்களைப் பொறுத்தவரை மும்பையில் அதிகபட்சமாக
23,468 விபத்துகள் நேரிட்டுள்ளன. டெல்லியில் அதிகபட்சமாக 1,622பேர் சாலை விபத்துக்களால்
உயிரிழந்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.