அமெரிக்க பயண திட்டம் கூட இன்னும் முடிவடையாத நிலையில் தனது அடுத்த பயணத்தை திட்டமிட்டு விட்டார் பிரதமர் மோடி. வருகிற நவம்பர் 23 முதல் 25ம் தேதி சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக நடுவண் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிரதமர் மோடியின் சிங்கப்பூர் பயணத்தின் போது இருநாட்டு உறவு மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்த ஒத்துழைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். மேலும் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் நிறைவேற்றப்பட உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு முன்னதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சண்முகம் வருகிற அக்டோபர் 12ம் தேதி டெல்லி வருகிறார். அப்போது அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசுகிறார். இருவரும் மோடியின் சிங்கப்பூர் பயணம் குறித்து ஆலோசனை நடத்துவர் என்று தெரிகிறது. அமெரிக்காவில் சான் ஜோஸ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியை போல சிங்கப்பூரில் நீண்ட காலமாக வசித்து வரும் இந்திய சமூகத்தினரை சந்திக்கவும் மோடி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் 10வது மிகப் பெரிய நாடு சிங்கப்பூர் என்பது குறிப்பிடத்தக்கது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.