காஷ்மீரில் எம்எல்ஏக்களுக்காக ரூ.11 கோடியில் 100 சொகுசு கார்களை வாங்க முதல்வர் முப்தி அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீரில் பாஜ-பிடிபி கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பிடிபி கட்சி தலைவர் முப்தி முகமது சயீத் முதல்வராக உள்ளார். தற்போது தனது அரசின் சார்பில் எம்எல்ஏக்கள் பயணம் செய்வதற்காக 100 புதிய சொகுசு கார்களை வாங்க முப்தி அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி காஷ்மீர் உள்துறை அமைச்சகம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு காரும் ரூ.11 லட்சத்திற்கும் அதிகமான மதிப்பில் 100 கார்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில உள்துறையின் முதன்மை செயலாளர் ஆர்.கே. கோயல் விடுத்துள்ள அறிக்கையில் கூறுகையில், மகேந்திர ஸ்கார்பியோ ரக கார்கள் அரசின் கொள்முதல் விலையான ரூ.11.26 லட்சத்தில் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் அனைத்தும் தற்போதைய எம்எல்ஏக்கள், எம்எல்சிக்கள் பயணம் செய்வதற்காக பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு காஷ்மீரில் ஏற்பட்ட வௌ;ளத்தில் சிக்கி 300க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான சொத்துகள் நாசமடைந்தன. இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு முடிய உள்ள நிலையில் மாநில அரசு முறையாக நிவாரண பணிகளை மேற்கொள்ளவில்லை என பல்வேறு தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் முப்தி அரசின் கார் வாங்கும் முடிவு பல்வேறு தரப்பிலும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. வௌ;ள நிவாரண பணிகளில் மாநில அரசின் மெத்தனத்தை கண்டித்து வருகிற 7ம் தேதி வர்த்தகர்கள் போராட்டம் நடத்த உள்ளனர். மேலும் முப்தி அரசின் முடிவை கண்டித்து முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, கடந்த ஆட்சியில் கஜானாவை காலி செய்து விட்டதாக கூறும் முப்தி அரசுக்கு தற்போது 100 சொகுசு கார்களை வாங்கும் அளவுக்கு காசு போதுமானாதாக இருந்ததா என்று தனது டுவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.