தமிழகச் சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகி வ.உ.சிதம்பரனார். இந்த நேரத்தில் அவரது லட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். பாஜக நடுவண் அரசு வங்கி, காப்பீடு ஆகிய துறைகளை முழுமையாக அந்நியமயமாக்கிவிட்டது. இதைத் கண்டித்து கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. எதிர்க்கட்சிகளின் வலுவான போராட்டத்தின் காரணமாகத்தான் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுவே எங்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகும். விலைவாசி உயர்வு காரணமாக அனைத்துப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துவிட்டன. விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணமாகும். தமிழகத்தில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேயமக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து தமிழகத்தில் 15 அம்சக் கோரிக்கைகளை மையப்படுத்தி மக்கள் நல கூட்டு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் 5 கட்சிகளும் இணைந்தே தேர்தலைச் சந்திக்கும். சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த இயக்கம் 3-வது அணியாக மாறும். தே.மு.தி.க., த.மா.கா.வை சேர்ப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவோம். நிச்சயம் நல்ல முடிவு அவர்களிடமிருந்து கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அனைத்துப் பிரச்னைகளுக்கும் அதிமுக, திமுகதான் காரணம். எனவே அவர்களுடன் இணைந்து போட்டியிட வாய்ப்பில்லை மதுவிலக்கு போராட்டத்தை யாரும் கைவிடவில்லை. மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சட்டமன்றத்தில் வலியுறுத்தி வருகிறோம். சட்டப்பேரவையிலிருந்து தேமுதிக உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி முதல்வருக்கு பலமுறை கடிதம் எழுதியும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. தமிழக சட்டப்பேரவை ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை. இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றார் ராமகிருஷ்ணன்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.