Show all

வீர மங்கையர் குலத்தின் மணிவிளக்காம் தமிழினி மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலி: வைகோ.

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரான தமிழினியின் மறைவுக்கு,

மதிமுக தலைவர் வைகோ தனது இரங்கல் செய்தியில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு செயலாற்றி வந்த சகோதரி தமிழினி உயிர் நீத்தார் என்ற செய்தி என்னை துக்கத்தில் ஆழ்த்தியது.

சிறந்த மதிநுட்பமும், அறிவாற்றலும்,உயர்ந்த பண்புகளும் கொண்ட தமிழ்மகள் இவர். தமிழீழத்தின் தொன்மை வரலாறு, பெரும்பான்மையினரின் அடக்குமுறை, அனைத்துலக நாடுகளின் அணுகுமுறை அனைத்தையும் தேர்ந்து தெளிந்திருந்த வீராங்கணை இவர்.

கடந்த 2009இல் முள்ளிவாய்க்கால் படுகொலை காலகட்டத்தில் இலங்கை படையினரால் கைதுசெய்யப்பட்டு, 2013 வரை சிறப்புத் தடுப்பு சிறை முகாமில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது. தடுப்பு முகாமில் சொல்ல இயலாத சித்திரவதைகளுக்கு ஆளாகியிருக்க வாய்ப்பிருக்கிறது. உயிரை விட மானத்தைப் பெரிதாகப் போற்றுகிற வீர தமிழ் நங்கைகள், தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பொதுவாக வெளியிடுவதில்லை.

நெடுதுயர்ந்த கம்பீரமான தோற்றமும், இனிய பண்புகளும் நிறைந்த வீர மங்கையர் குலத்தின் மணிவிளக்காம் தமிழினி மறைவுக்கு என் கண்ணீர் அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.