Show all

‘விழுக்காட்டு அடிப்படை பேராளர் தேர்தல்’ முறையை இந்தியா முன்னெடுக்க வேண்டும்! இராதாபுரம் வழக்கு உணர்த்தும் பாடம்

இராதாபுரம் அடிப்படையில் வழக்கைச் சந்திக்க வாய்ப்புள்ள தொகுதிகள் இந்தியாவில் ஏராளமாக உள்ளன. இதற்கான தீர்வு: ஆஸ்திரேலியா, பிரேசில், ஜெர்மனி, இஸ்ரேல், ஸ்பெயின் உள்ளிட்ட, 90 நாடுகளுக்கு மேல், ‘விழுக்காட்டு அடிப்படை பேராளர் தேர்தல்’ வெவ்வேறு வகைகளில் நடைமுறையில் உள்ளது. அந்த முறையை இந்தியாவும் முன்னெடுக்க வேண்டும்.

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை எதிர்வரும் 06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (23.10.2019) அன்று வரை வெளியிட தடை விதித்து உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார். இதில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் அப்பாவு, தேர்தலின்போது பதிவாகி எண்ணப்படாத அஞ்சல் வழி வாக்குகளை எண்ணவும், அதோடு, 19, 20, 21வது சுற்றில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணவும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்அறங்கூற்றுமன்றம் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவின்படி, சட்டமன்ற தேர்தலின்போது பதிவான ஆயிரத்து 508 அஞ்சல்வழி வாக்குகளும், 19, 20, 21வது சுற்றுகளில் பதிவான 16 ஆயிரத்து எட்டு வாக்குகள் எண்ணும் பணி சென்னை உயர்அறங்கூற்றுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. உயர்அறங்கூற்றுமன்ற பதிவாளர் முன்னிலையில் 24 பணியாளர்கள் வாக்குகள் எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னதாக அஞ்சல்வழி வாக்குகளும், அதன்பின் மூன்று சுற்றுகளில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டன.

இதற்கிடையே சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தின் மறு வாக்கு எண்ணிக்கை உத்தரவை எதிர்த்து இராதாபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் இன்பதுரை, உச்சஅறங்கூற்றுமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை, எதிர்வரும் 06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121 (23.10.2019) அன்று வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், வழக்கில் தொடர்புடைய அப்பாவு உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அன்றைய நாளுக்கு உச்சஅறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் ஒத்திவைத்தனர்.

எனினும், ஒவ்வொரு சுற்றும் எண்ணப்பட்ட பின் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் சென்னை உயர்அறங்கூற்றுமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், அந்த நாள் வரை இராதபுரம் சட்டமன்ற உறுப்பினர் யார் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் இன்னும் பல தொகுதிகளுக்கு இது போன்ற குறைந்த பட்ச வாக்கு வேறுபாடுகள் காணும் தொகுதிகள் நிறையவே உள்ளன. அவர்கள் எல்லாம், இது போன்று வழக்குகள் தொடரப் படாததால், சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியில் தொடருகின்றார்கள். 

இனி வரும் காலங்களில் இன்னும் கொடுமையாக நிறைய தொகுதிகளில் வாக்கு வேறுபாடுகள் மிக மிக குறைந்தே பதிவாகும் நிலை இருக்கிறது. 

இந்த நிலையில்; இனி நாம் இந்தியாவிற்கு முன்னெடுக்க வேண்டியது, ‘விழுக்காட்டு அடிப்படை பேராளர் தேர்தல்’ முறையே ஆகும்.

மாணவர்களுக்கான தேர்வு முறை, மக்கள் பேராளர்களுக்கான தேர்தல் முறை, இவை இரண்டும், பிரித்தானியர்கள் நம் நாட்டில் விட்டுச் சென்ற இரண்டு முதன்மை எச்சங்கள். மனப்பாடத்திற்கு முதன்மையமளிக்கும் தேர்வு முறையால் சீரழிந்தது கல்வி. அதிக ஓட்டு வாங்குபவன் வெற்றியாளன் என்ற தேர்தல் முறையால், பாழானது மக்;களாட்சி.

ஓட்டுக்குப் பணம், பிரியாணி, சாராயம், பரிசுப் பொருட்கள் என, அனைத்தையும் வாரியிறைத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கி வென்று விடலாம் என்கிற தேர்தல் போட்டியாளர்களின் மனநிலைக்கு நமது தேர்தல் முறை காரணமாகி மக்களாட்சி கேள்விக் குறியாகி வருகிறது. 

தீர்வு! தேர்தல் நடத்தை விதிமுறைகளில் இல்லை; தேர்தல் நடத்தும் வழிமுறையில் உள்ளது. 'போட்டியிட்டோரில், முதலிடத்தைப் பெற்றவர் வெற்றி பெற்றவர்” என்ற முறை தான், தற்போது தேர்தல் முறையாக உள்ளது. அதாவது, 99 ஓட்டுகள் வாங்கிய ஒருவர் தோல்வி அடைகிறார். ஒரு ஓட்டு கூடுதலாக, 100 ஓட்டுகள் வாங்கியவர் வெற்றி பெறுகிறார். இந்த நிலையால், 99 பேர்கள் வாக்களித்த போட்டியாளர் தேர்ந்தெடுக்கப் படாததால் அந்த 99 பேர்களுக்கு ஆட்சி உரிமை மறுக்கப் பட்டு விடுகிறது என்பதே உண்மை. அது மட்டுமல்லாமல், முடிந்த அளவு முறைகேடுகளில் ஈடுபட்டு, ஒவ்வொரு ஓட்டையும் விலைக்கு வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் வேட்பாளன்.

வெற்றி, -தோல்வி என்பதற்கு அப்பாற்பட்டு, எவ்வளவு ஓட்டுகள் கிடைக்கின்றனவோ, அதற்கு ஏற்ப சட்டமன்றத்தில் பேராண்மை கிடைக்கும் என்ற நிலை வந்தால், இந்த, 'ஓட்டு- வணிகம்” பெருமளவு குறையும். இதற்குத் தான் ‘விழுக்காட்டு அடிப்படை பேராளர் தேர்தல்’ என்று பெயர். 

ஆஸ்திரேலியா, பிரேசில், ஜெர்மனி, இஸ்ரேல், ஸ்பெயின் உள்ளிட்ட, 90 நாடுகளுக்கு மேல், இந்த ‘விழுக்காட்டு அடிப்படை பேராளர் தேர்தல்’ வெவ்வேறு வகைகளில் நடைமுறையில் உள்ளது. 

ஏன், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னமேயே, அண்ணாதுரை அவர்கள் இதை வலியுறுத்தியுள்ளார்; மாநிலங்களவையிலும் இதுபற்றிப் பேசியுள்ளார். இடதுசாரிகளும் இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இப்போதுள்ள தேர்தல் முறையின் விளைவுகளை, 2011 சட்ட மன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்ப்போம்.

அந்த தேர்தலில், அதிமுக, கூட்டணி, 52 விழுக்காடு ஓட்டுகளையும், (1.91 கோடி ஓட்டுகள்), திமுக கூட்டணி, 39 விழுக்காட்டு வாக்குகளையும் (1.45 கோடி ஓட்டுகள்) பெற்றன. 52 விழுக்காட்டு ஓட்டுகள் பெற்ற அதிமுக, அணிக்கு, 203 இடங்களும், 39 விழுக்காட்டு ஓட்டுகள் பெற்ற திமுக, அணிக்கு, 31 இடங்களும் கிடைத்தன. இரண்டு அணிக்கும் வித்தியாசம், 50 லட்சம் ஓட்டுகள் கூட இல்லை. ஆனால், அதிமுக, அணி, 203 இடங்களைப் பெற்றதோடு, அந்த அணியைச் சேர்ந்த, தேமுதிகவிற்கு முதன்மை எதிர்க்கட்சி பொறுப்பும் கிடைத்தது. ஆனால் முதன்மைக் கட்சியான திமுக எதிர்க்கட்சி தகுதியை இழந்தது. இதுதான் இப்போதுள்ள தேர்தல் முறையின் வினோதம்.

நான்கு கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன. 100க்கு, 70 பேர் ஓட்டு போடுகின்றனர். ஒரு கட்சி, 30 ஓட்டுகளும், மீதியுள்ள நான்கு கட்சிகளும் தலா, 10 ஓட்டுகளும் பெறுகின்றன. 30 ஓட்டுகள் பெற்றோர், வென்றவர்கள் ஆகி விடுகின்றனர். மீதியுள்ள, 40 பேரின் பேராளர் யார்? இது எப்படி நேர்மையான மக்களாட்சியாக இருக்க முடியும். இந்திய மக்களாட்சியின் மீதான கேள்விக்கு விடை, ‘விழுக்காட்டு அடிப்படை பேராளர் தேர்தல்’ தான். 

இதில் திறந்த பட்டியல் முறை, மூடிய பட்டியல் முறை, கலப்பு உறுப்பினர் முறை என, ஏராளமான வகைகள் உள்ளன. நம் நாட்டிற்குப் பொருத்தமான ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம். தேர்தல் முறையை மாற்ற, அரசியல் சாசனத்தையே மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேர்தல்கள், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் - 1951ன் படி நடத்தப்படுவதால், அதில் மட்டும் மாற்றம் கொண்டு வந்தாலே போதுமானது.

‘விழுக்காட்டு அடிப்படை பேராளர் தேர்தல்’ முறையானது வெற்றி பெறும் கட்சிக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும்; இல்லையெனில் நம் ஓட்டு வீணாகி விடும் என்ற மனோபாவத்தை மக்களிடம் மாற்றும். தேர்தலில் நேர்மையாகப் போட்டியிட விரும்பும் கட்சிகளுக்கு உந்து சக்தியாக இருக்கும்.

அனைத்து தரப்பு மக்களின் பேராண்மையும் சட்டமன்றத்தில் இருப்பதை உறுதி செய்யும். பல நூறு கோடிகள் கொட்டி ஓட்டுகளை விலைக்கு வாங்கும் போக்கிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒட்டுமொத்தத்தில், மக்களாட்சியை வலுப்படுத்தும். ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் கட்சிகள், நாட்டு நலன் கருதி, இதுகுறித்து விவாதிக்க வேண்டும். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,296.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.