தவறான வரைபடத்தை வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க
வகைசெய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இந்திய வரைபடத்தை வெளியிடுவதற்கு முன் நடுவண் அரசிடம் முறையான
அனுமதிப் பெறவேண்டும் என்றும், அப்படி அனுமதி பெறாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கும் வகையில் சட்டம் இயற்ற நடுவண் அரசு முடிவு செய்துள்ளதாகவும் செய்தி வெளியானது.
மேலும் தவறான இந்திய வரைபடத்தை வெளியிடுபவர்களுக்கு ஒரு ஆண்டு
சிறைத்தண்டனையும், ரூபாய் 100 கோடி வரை அபராதமும் விதிக்க பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும்
விதமாக பாகிஸ்தான் அரசு ஐ.நா. அவையில் புகார் செய்துள்ளது. பாகிஸ்தான் அளித்துள்ள புகாரில், இந்தியாவின் இந்தச் செயல் தவறான
மற்றும் சட்டப்பூர்வமாக ஏற்கமுடியாத செயல் என்றும், ஐ.நா. அவையின் விதிமுறைகளுக்கு
எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் புகாருக்கு இந்தியா தக்க பதிலடிக் கொடுத்துள்ளது.
இதுபற்றி வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த மூன்றாம்
தரப்பினருக்கோ இந்தியாவின் உள்நாட்டு சட்ட விவகாரத்தில் தலையிடும் உரிமை இல்லை”
என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.