Show all

120நாடுகள் புறக்கணித்துள்ள வாக்குப் பதிவு எந்திரங்கள் நமக்கு வேண்டவே வேண்டாம்! சந்திரபாபு நாயுடு, மற்றும் மாயாவதி

10,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வலிமையான பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் வங்கி கொள்ளை என்பதெல்லாம் சாத்தியம் இல்லாமல் இருக்கிறது. பணம் வழங்கும் இயந்திரங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் போது மிகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடுகிறது. ஆனாலும் உடனடியாகக் கண்டு பிடிக்கப் பட்டும் விடுகிறது.

அதே சமயம், சுழியம் குற்றங்கள் என்று, தனிநபர் வங்கிக் கணக்குகளில் இருந்து கொள்ளையடிக்கிற பணங்கள் குறித்து, துப்பு துலக்க முடியாமல் நிறைய வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

அதுபோலவே வாக்குசீட்டு முறையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும் முடியும், மீறி நடக்கும் தவறுகளை உடனடியாக கண்டறியவும் முடியும்.   

ஆனால் மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கும் போது, அதைத் தடுக்கவோ, கண்டுபிடிக்கவோ நாம் வளர்ந்தாலும் குற்றவாளிகள் நம்மை விட வேகமாக வளர்கின்றனர். இந்தக் குற்றத்தை ஆட்சியாளர்களே செய்தால் யார் எப்படி தடுக்க முடியும் என்கிற அச்சம் எதிர்கட்சியினரையும், கிடுநடுங்க வைப்பது இயற்கைதான்.

அப்படி அச்சமுள்ள நிலையில் உடனடியாக வாக்குப் பதிவு எந்திரங்களைக் கைவிட்டு வாக்குச்சீட்டு முறையை அமுல் படுத்துவதுதாம் அறிவுடைமையும் பண்புடைமையும் ஆகும். 

இந்த அடிப்படைகளை முன்வைத்து, அடுத்து பாராளுமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும் என சந்திரபாபு நாயுடு, மாயாவதி கூறியுள்ளனர். 'இந்தியாவில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்யமுடியும்' என்று அமெரிக்காவை சேர்ந்த மின்னணு தொழில்நுட்ப நிபுணர் சையது சுஜா குற்றம் சாட்டினார்.

இதனால் தான் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வெற்றிபெற்றது என்றும் கூறி இருக்கிறார். இதுபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றி, தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளிடமும் கருத்து கேட்க வேண்டும். கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்து பா.ஜனதா வெற்றிபெற்றதாக லண்டனில் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உடனடியாக பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாறவேண்டும். எதிர்க்கட்சித் தலைவர்கள் விரைவில் ஒன்றுகூடி, வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்தும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் எந்திரம் தொடர்பாகவும் கலந்து ஆலோசிப்போம்.

நாங்கள் நவீன தொழில் நுட்பத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது. இப்போது 120 நாடுகளில் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படவில்லை. 20 நாடுகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. எனவே, வாக்கு எந்திரங்களை நாம் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

பகுஜன் சமாஜ் வாடி கட்சி தலைவர் மாயாவதி கூறியிருப்பதாவது:

வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக வெளியாகி உள்ள தகவல்கள், அதன் மீதான சந்தேகத்தை மேலும் வலுவாக்கி உள்ளது. எனவே எதிர்காலத்தில் நடக்க உள்ள அனைத்து தேர்தல்களையும் வாக்குச்சீட்டு முறையில் நடத்துவது சிறப்பாக இருக்கும். குறிப்பாக பாராளுமன்ற தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்த வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரம் தொடர்பாக வெளியாகி இருக்கும் தகவல்களால் பா.ஜனதாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பா.ஜனதாவின் சதியை இந்த தகவல் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வுகாணும் விதமாக பா.ஜனதா அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை. எனவே, தேர்தல் ஆணையம் இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வாக்குப்பதிவு எந்திரம் பற்றிய குற்றச்சாட்டு காங்கிரஸ் சதி என்று பா.ஜனதா விமர்சனம் செய்கிறது. இதற்கு பதில் அளித்து கபில்சிபல் கூறியதாவது:

வாக்குப்பதிவு எந்திரங்கள் தொடர்பாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. நமது நாட்டின் ஜனநாயகம் நிலைக்க இந்த குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.

யாராவது குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் அவை உண்மையா, அல்லது பொய்யா என்பது குறித்து முதலில் விசாரணை நடத்த வேண்டும் என்று உச்சஅறங்கூற்று மன்றமும், சட்டங்களும் கூறுகின்றன. 

இப்போது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய் என்றால் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அது உண்மை என்றால் மிக தீவிரமான, ஆபத்தான, இந்தியாவின் பாதுகாப்புக்கு சவால் விடக்கூடிய, மிக மிக பொறுப்பான விசயம். இந்த விவகாரத்தில் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ள கருத்துக்கள் பொறுப்பற்றவை. சிறுபிள்ளை தனமானவை. இதுபோன்ற கருத்துக்கள் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,041.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.