தில்லி முதல்வர்
அரவிந்த் கேஜ்ரிவால், ஷூ வாங்கிக் கொள்வதற்காக, அவருக்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த
தொழிலதிபரான சுமித் அகர்வால் ரூ. 364-ஐ அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பாக கெஜ்ரிவாலுக்கு
அவர் எழுதியுள்ள கடிதத்தில், ‘இந்தியாவை மீண்டும் ஒருமுறை இதுபோல தர்மசங்கடமான
சூழ்நிலைக்கு ஆட்படுத்த வேண்டாம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் 67-வது
குடியரசு தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரான்ஸ் நாட்டு அதிபர் பிரான்சிஸ்
ஹோலண்டே சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இதற்காக தில்லி வந்திருந்த அவருக்கு
குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. பல்வேறு முக்கிய
நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த இந்த விருந்தில், தில்லி முதல்வர் அரவிந்த்
கெஜ்ரிவாலும் கலந்துகொண்டார். அப்போது அவர் ‘ஷூ’ அணிவதற்கு பதிலாக செருப்பு அணிந்திருந்தார். இந்நிலையில், அவரது
இந்தச் செயலுக்கு அதிருப்தி தெரிவித்து விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுமித் அக்ரவால்
என்ற தொழிலதிபர் கடிதம் எழுதியுள்ளார். அத்துடன், கேஜ்ரிவாலை ஷூ வாங்கிக் கொள்ளுமாறு
கூறி அவருக்கு ரூ.364-க்கு வரைவோலையும் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில்,
‘குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு
விருந்து நிகழ்ச்சியில் நீங்கள் (கெஜ்ரிவால்) கலந்துகொண்டீர்களே தவிர, ஜந்தர் மந்தரிலோ,
ராம்லீலா மைதானத்திலோ நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
ஒரு பொது விளம்பரத்திற்காகத்தான் நீங்கள் செருப்பை பயன்படுத்துகிறீர்களா? ஒருவர் தனது
வசதிக்கேற்ப உடையோ, செருப்போ அணிவது அவரது தனிப்பட்ட சுதந்திரம் தான். இருப்பினும், சில
இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தனிப்பட்ட விருப்பத்திற்கு
அப்பாற்பட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். நீங்கள் ஒரு முதிர்ச்சியான மனிதர். சூழ்நிலைக்கேற்றார்போல்
நடந்துகொள்ளுங்கள். இந்தியாவை மீண்டும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் சூழ்நிலையை ஏற்படுத்தாதீர்கள்.
அதற்காகவே நீங்கள் ஷூ வாங்கிக் கொள்ள இந்தத் தொகையை அனுப்புகிறேன்’
என்று அந்தக் கடிதத்தில்
சுமித் அக்ரவால் கூறியுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.