சிலப்பதிகாரக் காப்பியத்தலைவி கண்ணகி கோவில் சித்திரை
முழுநிலா நாள் திருவிழா தொடர்பாக தேனி-இடுக்கி மாவட்ட ஆட்சியாளர்கள் தலைமையில் இருமாநில
அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் வருகிற 5-ந்தேதி நடத்தப்பட உள்ளது தேனி மாவட்டம், கூடலூர் அருகே பளியன்குடி மலைப்பகுதியில்,
தமிழக-கேரள மாநில எல்லையில் பழந்தமிழ் மாமன்னன் சேரன் செங்குட்டுவன் தமிழர்
மக்கள் காப்பியத்தலைவி கண்ணகிக்கு கட்டிய கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முழுநிலா
நாளில் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரள மாநில பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு
வந்து செல்வார்கள். இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 22-ந்தேதி
நடைபெற உள்ளது. கண்ணகி கோவில் சித்திரை முழுநிலா நாள் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாக
இருமாநில அதிகாரிகளும் ஆலோசனை கூட்டம் நடத்தி முக்கிய முடிவுகள் எடுப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இருமாநில
அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் வருகிற 5ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற
உள்ளது. இந்தக் கூட்டம் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம்
தேக்கடியில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் தொடர்பாக இடுக்கி மாவட்ட ஆட்சியாளர்
கவுசிகன் தேனி மாவட்ட ஆட்சியாளர் வெங்கடாசலத்திற்கு கடிதம்
அனுப்பியுள்ளார். அதன்பேரில் தேனி, இடுக்கி மாவட்ட ஆட்சியாளர்களும்,
இருமாநில அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். ஒரு நாள் மட்டும் கொண்டாடும் திருவிழாவை மேலும்
சில நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஒவ்வொரு ஆண்டும் எழுந்து வருகிறது.
இந்த ஆண்டும் அந்தக் கோரிக்கை தொடர்பாக இருமாநில
அரசுக்கும் பக்தர்கள் கோரிக்கை மனுக்கள் அனுப்பி உள்ளனர். அதுதொடர்பாகவும், தேர்தல்
நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பக்தர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது
தொடர்பாகவும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த திருவிழாவின் போது விழா ஏற்பாட்டு பொறுப்பு
அதிகாரியாக தமிழக அரசு சார்பில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. நியமிக்கப்படுவார். ஆனால், தற்போது கம்பம் சட்டமன்ற தொகுதிக்காக தேர்தல்
நடத்தும் அலுவலராக உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. நியமிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு பதில் தேர்தல் ஏற்பாட்டு பொறுப்பு அதிகாரியாக
மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வட்டாட்சியர் நிலையில் 2 அதிகாரிகளை நியமிக்கவும் தேனி
மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக ஆட்சியாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.