ஆந்திர சட்டசபையில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை ஆபாசமாக பேசியதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பனர் நடிகை ரோஜா 1ஆண்டு தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார். ரோஜா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்தார். நேற்று காலை 9மணிக்கு ஆந்திர சட்டசபை கூட்டம் தொடங்கியது. ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவரது சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு வந்தனர். ஜெகன்மோகன் ரெட்டிக்கு இன்று பிறந்த நாள் என்பதால் அவருக்கு சந்திரபாபு நாயுடு உள்பட உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் ஜெகன் மோகன் ரெட்டி, ரோஜாவை 1ஆண்டு தற்காலிக நீக்கம் செய்தது சட்டமன்ற விதிமுறைக்கு மாறானது. முதல்மந்திரியை விமர்சிக்க உறுப்பினருக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் சபாநாயகரை ரோஜா விமர்சிக்கவில்லை. அப்படியிருக்க அவர் மீது நடவடிக்கை எடுத்து இருப்பது கண்டிக்கத்தக்கது. அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். ரோஜா மீதான நடவடிக்கையில் மாற்றம் இல்லை என்று மந்திரி எனமலுராம கிருஷ்ணலு தெரிவித்தார். இதனால் இந்த கூட்டத் தொடர் மூலம் அவையைப் புறக்கணிப்பதாக கூறி ஜெகன்மோகன் ரெட்டியும், மற்ற உறுப்பினர்களும் வெளியேறினார்கள். கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ஆந்திர சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நாளையுடன் முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று ஐதராபாத் மாளிகையில் தங்கி உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைத் தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்களோடு ஜெகன்மோகன் ரெட்டி நேற்று சந்தித்தார். சட்டசபையில் நடந்த விவரத்தை குடியரசுத் தலைவரிடம் விளக்கமாக தெரிவித்த அவர் நடிகை ரோஜாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 1 வருட தற்காலிக நீக்க நடவடிக்கையை ரத்து செய்ய கோரி சபாநாயகர் சிவபிரசாத்ராவுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனு அளித்தார். மேலும் ஆந்திர அரசியலில் புயலை கிளப்பி உள்ள கால்மணி செக்ஸ் விவகாரத்தில் குற்றவாளிகளுக்கும் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் உள்ள தொடர்பு குறித்து சரமாரி புகார் செய்தார். முதல்வருடன் குற்றவாளிகள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஆதாரமாக எடுத்துக் காட்டினார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.