Show all

தொழில் முனைவோர்களை அரசு ஊக்கப்படுத்தினால்தான் நாடு முன்னேற்றம் அடையும்: ரூடி

இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணியில் உள்ளது என நடுவண் மனிதவள இணை அமைச்சர் ராஜிவ் பிரதாப் ரூடி தெரிவித்தார்.

 காஞ்சிபுரம், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்திலுள்ள ஷிவிங் ஸ்டெட்டர் நிறுவனத்தில் தனியார் பங்களிப்பு மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நிலையத்தைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

 இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் பிரதமர் நரேந்திர மோடி அரசு கவனமாக உள்ளது. கிராமப்புற இளைஞர்கள் தொழில் பயிற்சிகளைப் பெற வேண்டும். இளைஞர்களுக்கு தொழில் பயிற்சி வழங்குவதில் இந்தியாவில் சென்னை முன்னணியில் இருப்பது பாராட்டத்தக்கது. சென்னையிலுள்ள நோக்கியா ஆலை மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வேலை பறிபோயுள்ளது. இதற்கு மாநில அரசே பொறுப்பு ஏற்க வேண்டும்.

 ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 10,000 கி.மீ. நெடுஞ்சாலைகள் அமைப்பதை குறிக்கோளாகக் கொண்டு மத்திய அரசு செயற்பட்டு வருகிறது.

 இதற்குத் தேவையான உபகரணங்களையும், மனித சக்தியும் இந்தியாவிற்குள்ளேயே விருத்தி செய்து கொள்ள வேண்டும். இந்தியாவில் அரசு நிறுவனங்களைவிட தொழில் முனைவோர்களே அதிகளவு வேலை வாய்ப்புகளை வழங்குகிறார்கள். தொழில் முனைவோர்களை அரசு ஊக்கப்படுத்தினால்தான் நாடு முன்னேற்றம் அடையும்.

 எல்லாத் துறைகளிலும் திறன் மிகு இளைஞர்களைக் கட்டி எழுப்பவேண்டும்.

 பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள பாடத் திட்டங்களில் தொழில் முனைவோருக்கான கல்விகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்வியின் மூலம் தொழில் சொல்லிக் கொடுக்க வேண்டும். திறன்மிகு இளைஞர்களை உருவாக்குவதன் மூலமாகவே பிரதமர் மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ முழக்கத்தை உண்மையாக்கலாம் என்றார்.

     

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.