உத்தரப் பிரதேசத்தில் 8 அமைச்சர்களை அதிரடியாக நீக்கி, அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன், 9 அமைச்சர்களின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. கடந்த 2012-ல் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 224 இடங்களில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்வராகப் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக 71 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் சமாஜ்வாதிக்கு ஐந்து இடங்கள் மட்டுமே கிடைத்தன. இந்நிலையில், வரும் 2017-ம் ஆண்டில் உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ‘மிஷன் 2017’ என்ற திட்டத்தை சமாஜ்வாதி கட்சி தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, முதல்வர் அகிலேஷ் யாதவ் அமைச்சரவை மாற்ற நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.