Show all

பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் பஞ்சாப்பை நோக்கி வருவதாகத் தகவல்

பாகிஸ்தானைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள், இந்தியர் ஒருவருடன் சேர்ந்து காஷ்மீரில் இருந்து பஞ்சாப்பை நோக்கி ஒரு காரில் வருவதாக டெல்லி போலீசார் பஞ்சாப் மாநில போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர்.

இந்தத் தீவிரவாதிகள் பஞ்சாப் எல்லையை நேற்று இரவில் அடையக்கூடும் என எச்சரித்து இருந்தனர்.

காஷ்மீர் மாநிலப் பதிவு எண் கொண்ட காரில் வருவதாக கூறப்பட்ட அந்த தீவிரவாதிகள், டெல்லி, கோவா மற்றும் மும்பையைக் குறிவைத்து தாக்குதல் நடத்தலாம் எனவும் கூறப்பட்டு இருந்தது.

இதற்காக பெருமளவு ஆயுதங்களுடன் அவர்கள் வருவதாகவும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்துமாறு அனைத்து காவல் நிலையங்கள், ஆணையாளர் அலுவலகங்களுக்கு காவல்துறை டி.ஜி.பி. உத்தரவிட்டு உள்ளார்.

இதனால் மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ‘உஷார்’ நிலையில் உள்ளனர்.

பாகிஸ்தான் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள இந்த மாநிலத்தின் பதன்கோட் விமானப்படை தளத்தில் கடந்த ஜனவரி மாதமும், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதமும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.