Show all

நொறுக்குத் தீனிகளைப் பள்ளிகளிலும், பள்ளிகளைச் சுற்றிலும் விற்பனை செய்ய தடை

குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணமான பாக்கெட் நொறுக்கு தீனிகளை பள்ளிகளிலும், பள்ளிகளைச் சுற்றிலும் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று நடுவண்அரசு அமைத்த குழு சிபாரிசு செய்துள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளிடையே ஜங்க் புட் எனப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்கு தீனிகளை சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், அவர்களுக்கு ஆரோக்கியமற்ற உடல் பருமன் ஏற்படுகிறது.அத்துடன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்ரீதியான குறைபாடுகளும், தன்னம்பிக்கையின்மை போன்ற மனரீதியான குறைபாடுகளும் ஏற்படுகின்றன.

இவற்றைக் கருத்தில் கொண்டு, பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் குறித்தும், அதற்கும் பாக்கெட் நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கும் இடையிலான தொடர்பு குறித்தும் ஆராய்வதற்காக நடுவண் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம், ஒரு குழுவை அமைத்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த தேசிய ஊட்டச்சத்து நிலைய இயக்குனர் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. தனது ஆய்வை முடித்துக் கொண்டு, இந்தக் குழு நடுவண் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

அந்த அறிக்கையில், பள்ளி குழந்தைகளிடையே உடல் பருமனும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உபாதைகளும் அதிகரித்து வருவது குறித்து குழு உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஜங்க் புட் என்பதற்கு விரிவான வரையறையை உருவாக்குமாறு யோசனை தெரிவித்துள்ள அந்த குழு அந்த வரையறைக்கு பொருந்துகிற அனைத்து தின்பண்டங்களையும் நாடு முழுவதும் உள்ள பள்ளிஉணவகங்களில் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளது.

பள்ளிகளில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள், பள்ளி நேரத்தின்போது, இந்த தின்பண்டங்களைக் கடைக்காரர்களோ, நடைபாதை வியாபாரிகளோ விற்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் சிபாரிசு செய்துள்ளது. மேலும், பள்ளியில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்குள் இருக்கும் கடைகள் மற்றும் உணவு விடுதிகள், இந்த தின்பண்டங்களை விற்பனைக்கு வைத்திருந்தால், அவற்றை சீருடை அணிந்த பள்ளி குழந்தைகளுக்கு விற்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் கமிட்டி சிபாரிசு செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.