Show all

தமிழீழமே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

இலங்கைத் தேர்தல் முடிவால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை; தமிழீழமே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியும் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை. எனினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவது உறுதியாகிவிட்டது.

இலங்கைத் தேர்தலில் தமிழர்களுக்கு சாதகமான அம்சம் ஏதேனும் உண்டு என்றால், அது முன்னாள் அதிபர் இராஜபக்சேவுக்கு ஏற்பட்ட தோல்வி தான். அதிபராக இருந்த போது 1.5 லட்சம் அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த இராஜபக்சே மீண்டும் பிரதமரானால், அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவார் என்று தமிழர்கள் அஞ்சினர். இத்தகைய சூழலில் இராஜபக்சே தோல்வியடைந்திருப்பது தமிழர்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது. இதைத் தவிர வேறு எந்த நன்மையும் ஈழத் தமிழர்களுக்கு ஏற்படப்போவதில்லை என்பது தான் உண்மையாகும்.

இலங்கைத் தேர்தல் முடிவுகள் உலகத்திற்கு சொல்லும் பாடம் என்னவெனில், அந்நாட்டில் சிங்கள இனத்தவரும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழ முடியாது என்பது தான். இந்தத் தேர்தலில் இராஜபக்சே தலைமையிலான அணியும், விக்கிரமசிங்க தலைமையிலான அணியும் தமிழர்களுக்கு எதிராகவும், சிங்கள இனவெறியை தூண்டும் வகையிலும் பரப்புரை மேற்கொண்டன. இதன்பயனாக சிங்களர்கள் வாக்குகளை இரு கட்சிகளும் சரிசமமாக பகிர்ந்து கொண்டனர். அதேபோல் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழர் தேசிய கூட்டமைப்பு தான் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் சிங்களர்களை ஆதரிக்கத் தயாரில்லை என்பதை தமிழர்களும், தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கத் தயாராக இல்லை என்பதை சிங்களர்களும் மீண்டும் ஒரு முறை தெரிவித்திருக்கின்றனர்.

இதே நிலை தொடர்ந்தால் தமிழர்கள் தொடர்ந்து கொத்தடிமைகளாகவே வாழ நேரிடும். இதன்பிறகும் இரு இனத்தினரும் ஒன்றாக வாழ்வது பொருந்தா கூட்டணியாகவே இருக்கும். எனவே, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தி தனித் தமிழீழம் அமைக்க ஐ.நா. அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.