லலித்மோடிக்கு உதவிய விவகாரத்தில் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் தொடர்பாக மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருவதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் முடங்கிப் போய் உள்ளன.
இதையடுத்து, மக்களவையை நடத்த விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த 25 காங்கிரஸ் உறுப்பினர்கள் 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்
இந்த நடவடிக்கையைக் கண்டித்து பாராளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்றும், இன்றும் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசின் இந்த சர்வாதிகாரப் போக்கை கண்டித்து நேற்று மக்களவைக்கு வந்த 12 காங்கிரஸ் உறுப்பினர்களும் கையில் கறுப்பு பட்டை அணிந்திருந்தனர். அரசுக்கு எதிராக பதாகைகளையும் வைத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை பாராளுமன்றம் கூடியபோதும் மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால் அவை 12 மணி வரையும், பின்னர் 2 மணி வரையும் ஒத்தி வைக்கப்பட்டது.
2 மணிக்கு பின்னர் அவை கூடியபோதும், காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து மாறவில்லை. தொடர்ந்து அமளியில் ஈடுபட்டாதால் மாநிலங்களவை இன்றும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.