Show all

ஒரு வாரத்திற்கு அதிமுக நிகழ்ச்சிகளும் ஏதும் நடக்காது-ஜெயலலிதா

முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு, அதிமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியத் திருநாட்டின் 11-வது குடியரசுத் தலைவர் பதவியில், அப்துல் கலாம் அவர்களின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தெரிவத்துள்ளார். தமிழ் அன்னையின் பெருமை மிகு புதல்வராக விளங்கிய டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் எளிமையான வாழ்வும், எல்லோரையும் நேசிக்கும் பண்பும் உலகம் அறிந்த உயர் குணங்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தன்னுடைய உழைப்பால், அறிவால், ஆற்றலால், தியாகத்தால் பல மகத்தான சாதனைகளை நிகழ்த்தி வரலாற்றில் இடம் பெற்றவர் அப்துல் கலாம் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். அவருடைய மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.