Show all

வடிவேலு சந்தையில் நன்கு விலைபோகும் யோகிபாபு!

07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரைப்படங்களில் கவுண்டமணி-செந்தில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த வேளையில் 'என் ராசாவின் மனசிலே' படத்தில் கும்பலில் ஒருவராக நடிகர் ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தபட்டவர் தான் வடிவேலு.

இவரது யதார்த்தமான உடல் அசைவு மொழியும், வசன உச்சரிப்புகளும் தமிழ் இரசிகர்களை கவர்ந்தது. நகைச்சுவை என்பது இருவர் சேர்ந்து பேசி நடித்தால் மட்டுமே பார்வையாளனை சிரிக்க வைக்க முடியும் என்ற அகராதியை மாற்றி எழுதியவர் இந்த வடிவேலு. திரைப்படங்களில் இவர் தனி ஆளாக வெளிப்டும் போதே அரங்கம் அதிரும்.

தனிநபராக மக்கள் செல்வாக்கை பெற்ற வடிவேல் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிம்புதேவன் இயக்கத்தில் சங்கர் தயாரித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் கதைத்தலைவனாக நடித்தார். கதைத்தலைவனாக நடித்த முதல் படமே வசூலில் சாதனை நிகழ்த்தியது.

அதன் பின் கதைத்தலைவனாக நடிக்க வடிவேலு முன்னுரிமை கொடுக்க தொடங்கினார். அவ்வளவாக பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை. கதைத்தலைவனாக நடித்து சொந்தமாகத் தயாரித்த படங்களும் தோல்வியடைந்தன. 

இப்போதும் வடிவேல் நாயகனாக நடிக்கும் புதிய படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். 

நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த போது நாள் கணக்கில் சம்பளம் வாங்கியதை கணக்கில் கொண்டு, கதைத்தலைவனாக நடிக்க தேவைப்படும் நாட்கள் எண்ணிக்கைக்கு சம்பளம் கேட்கிறார் வடிவேலு. இதனை கேட்கும் தயாரிப்பாளர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடத் தொடங்கி விடுகிறார்கள்.

ஒரு படத்தில் கதைத்தலைவனாக நடிக்க நான்கு கோடி ரூபாய் சம்பளம் கேட்கும் வடிவேலு நகைச்சுவையளனாக நடித்த போது ஒரு நாள் சம்பளம் 8 லட்ச ரூபாய். இன்றைய திரைப்பட வியாபாரத்தில் வடிவேலு கதைத்தலைவனாக நடிக்கும் படத்தை தயாரித்து வெளியிட சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டியிருக்கும்.

அதற்குரிய வியாபாரமும், வசூலும் வடிவேல் நடிக்கும் படங்களுக்கு இருக்காது என்பதால் அவரை கதைத்தலைவனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் சம்பளத்தை பாதியாக குறைத்து கொண்டால் படம் தயாரிக்கலாம் என்கின்றனர்.

புலி பசித்தாலும் புல்லை தின்னாது எனக்கோ பசியே கிடையாது என கூறுகிறாராம் வடிவேல். இதனால் வடிவேல் கதைத்தலைவனாக நடிக்க திட்டமிடப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் தர்ம பிரபு படத்தின் மூலம் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்திருக்கும் யோகி பாபுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர்.

தர்மபிரபு படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் கடும் போட்டியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,098.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.