Show all

ரூ.100 கோடி நிதியை உம்மன் சாண்டியிடம் மாதா அமிர்தானந்தமயி வழங்கினார்.

கேரளத்தில் கழிப்பறைகள் கட்டுதல், துப்புரவுப் பணிகள் ஆகியவற்றுக்கு ரூ.100 கோடி நிதியை அந்த மாநில முதல்வர் உம்மன் சாண்டியிடம் மாதா அமிர்தானந்தமயி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

கேரள மாநிலம், கொல்லம் அருகே வள்ளிகாவு எனுமிடத்தில் உள்ள மடத்தில் மாதா அமிர்தானந்தமயியின் 62ஆவது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவில் கேரள ஆளுநர் பி. சதாசிவம், முதல்வர் உம்மன் சாண்டி, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே. குரியன், மத்திய அமைச்சர்கள் நஜ்மா ஹெப்துல்லா, மனோஜ் சின்ஹா, ஸ்ரீபாத் யசோ நாயக், இந்தியாவுக்கான பிரான்ஸ் நாட்டுத் தூதர் பிரான்கோயிஸ் ரிசியர், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில், ரூ.100 கோடிக்கான காசோலையை கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் மாதா அமிர்தானந்தமயி வழங்கினார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:

இந்தியாவுக்கு 2 முகங்கள் உள்ளன. அதில் ஒரு முகம், வளர்ச்சி. 2ஆவது முகம், வறுமை. ஒரு பக்கத்தில், அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட முன்னேற்றங்களால் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மறுபுறம், வறுமை, கல்வியறிவின்மை, மோசமான சுகாதாரம், பெண்களுக்கு எதிரான குற்றம் போன்றவை நிலவுகின்றன.

சக்திவாய்ந்த நாடாகவும், ஆரோக்கியமான நாடாகவும் காண வேண்டுமெனில், மேற்கண்ட 2 முகங்களையும் ஒன்றாக்கி, அழகான முகமாக்க வேண்டும். அவ்வாறு நாம் செய்தால், இந்தியா வளர்ச்சியடைவதையும், அமைதி, நல்லிணக்கம், அபிவிருத்தி அடைவதையும் காண முடியும் என்றார் மாதா அமிர்தானந்தமயி.

விழாவில், கேரளம், ஒடிஸா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மாதா அமிர்தானந்த மயி மடத்தால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. சம்ஸ்கிருத அறிஞர் முத்துகுளம் ஸ்ரீதரன் என்பவருக்கு அம்ரிதா கீர்த்தி புரஸ்கார் விருதை மாதா அமிர்தானந்த மயி வழங்கினார். விழாவில் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேசும்போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாதா அமிர்தானந்த மயி மடம் மேற்கொண்டு வரும் பணிகள், சேவைகளைப் பாராட்டினார்.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பேசுகையில், மாதா அமிர்தானந்த மயி ஆற்றிவரும் சேவைகளால், ஜாதி, இனம், மதம், நிறம், பாலினம் போன்ற வித்தியாசமில்லாமல், ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர்; பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா, கங்கையை சுத்தப்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு ரூ.100 கோடி நிதியளித்ததற்காக மாதா அமிர்தானந்தமயிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற சேவைகளை நமது வரலாற்றில், மாதா அமிர்தானந்தமயி போல் வேறு யாரும் செய்தது இல்லை என்றார்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.