Show all

மூக்குத்தி முருகன் சாதனை! விஜய் தொலைக்காட்சியின் பருவம்7 சிறந்தபாடகர் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளராகி

விஜய் தொலைக்காட்சி நடத்தி வந்த, பருவம்7 சிறந்தபாடகர் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்- ஓவியம் மற்றும் இசை என,  இருதுறையில் வல்லவரான மூக்குத்தி முருகன்
 
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வந்த, பருவம்7 சிறந்தபாடகர் போட்டி நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று கோவையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத் பங்கேற்றார்.

பல்வேறு கட்டங்களைத் தாண்டி நடைப்பெற்ற இறுதிப் போட்டிக்கு மூக்குத்தி முருகன், சாம் நிசாந்த், புண்யா, விக்ரம் மற்றும் கௌதம் ஆகிய ஐந்து பேர் தகுதிப் பெற்றனர்.

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் மூன்றாவது இடத்தை சாம் நிஷாந்த் மற்றும் புண்யா இருவரும் பெற்றனர். இரண்டாமிடத்தை விக்ரம் பெற்றார். மூக்குத்தி முருகன் முதலிடத்தைப் பெற்று பருவம்7 சிறந்தபாடகர் போட்டி நிகழ்ச்சியின் வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.

நிகழ்ச்சியின் போட்டியில் பாடிக்கொண்டே, சில புகழ்மனிதர்களின் படங்களை அழகாக வரைந்து காட்டினார் மூக்குத்தி முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களாகத் தொடர்ந்த, பருவம்7 சிறந்தபாடகர் போட்டி நிகழ்ச்சியின் போது, திறமையாளர் முருகனை, கலாய்ப்பதற்கு பிரியங்காவும்- மாகபாவும் கண்ணியக் குறைவான நகைச்சுவைகளை முன்னெடுத்தது நெருடலாக இருந்தது; தவிர்த்திருக்கலாம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,333.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.