Show all

இணையத் தொழில் நுட்ப அடிப்படையிலான விளக்கம்! தமிழ் ராக்கர்ஸ் பாதிப்பிலிருந்து விடுபட திரையுலகம் செய்ய வேண்டியது என்ன

26,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்கார் திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே தங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்துக்காட்டியுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் தீபாவளியன்று உலகம் முழுவதும் வெளியானது.

முன்னதாக, சர்கார் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்கள், கம்பிவடத் தொலைக் காட்சிகளில் வெளியிடக்கூடாது என்று கூறி அதன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உயர்அறங்கூற்றுமன்றத்தை நாடியிருந்தது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் அறங்கூற்றுமன்;றம் சர்கார் திரைப்படத்தை திரையரங்கம் தவிர்த்து சட்டவிரோதமாக இணையதளங்கள், கமபிவடத் தொலைக்காட்சிகள், பதிவுத் தட்டுகள் உள்ளிட்ட எந்த வகையிலும் வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்ததது. அதையடுத்து, தமிழ் ராக்கர்ஸ் விடுத்துள்ள சவாலை முறியடிப்போம் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் தரப்பில் கூறப்பட்டது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், 'சமூக வலைதளங்களில் நம் உழைப்பைச் சுரண்டும் திருடன் தமிழ் ராக்கர்ஸ் சர்கார் படம் வெளியான மாலையே உயர்தரப்பதிப்பில் வெளியிடுவதாக சவால் விடுத்துள்ளார்கள். இதற்கு நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட்டு தமிழ் ராக்கர்ஸ் என்ற திருடனை வெல்ல விடாமல் கண்காணிப்பு ஆட்களை நியமித்து, படம்பிடிப்பவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்' என்று தெரிவித்திருந்தது. அதுமட்டுமின்றி, அனைத்து திரையரங்கிலும் கண்காணிப்பு படக்கருவிகள் பொருத்த வேண்டுமென்றும் திரையரங்கங்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திட்டமிட்டபடி தீபாவளியன்று காலை தமிழ்நாடு மட்டுமில்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் சர்கார் திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அத்திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புக்கள் தரவாரியாக தனித்தனியே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

சட்டரீதியான நடவடிக்கை மற்றும் திரையரங்குகளில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளையும் மீறி சர்கார் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியுள்ளது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கோடிக்கணக்கான பணம், பல மாத உழைப்பில் உருவாகும் கிட்டத்தட்ட அனைத்து திரைப்படங்களும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில், திருட்டுத் தனமாக வெளியாவது தொடர்கதையாகி வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவட்டுகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது பெரிய பிரச்சனையாக இருந்தது. அதையடுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்ததோ, இல்லையோ மலிவான விலையில் வேகமான இணையதள சேவைகள் கிடைக்க தொடங்கிய பிறகு, திரைப்படங்கள் திருடப்பட்டு இணையதளங்களில் வெளியாக தொடங்கின. அந்த விவகாரம் தற்போது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

திருட்டு குறுவட்டுக்களை ஒழிப்பதற்கு காவல்துறையினர் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைளை போன்று, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை தடைசெய்வதற்கு பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்துக்கு சென்று பார்த்தால், 'நீங்கள் பதிவிட்ட இணையதள முகவரி இந்திய தொலைத்தொடர்புத்துறையின் வழிகாட்டுதலின்படி தடைசெய்யப்பட்டுள்ளது' என்று வரும். அதைத்தொடர்ந்து தமிழ் ராக்கர்ஸ் இணையதளமானது. பல்வேறு களங்களில் தொடங்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டன.

மேற்குறிப்பிட்ட தமிழ் ராக்கர்ஸின் அனைத்து இணையதள முகவரிகளும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மற்றொரு பெயரில் ஒரு இணையதளம் தொடங்கப்பட்டு சர்கார் உள்ளிட்ட புதிய படங்கள் திருடி வெளியிடப்பட்டு வருகிறது.

புதுப்புது பெயரில் முளைத்து திரைப்படத்துறை, தொலைத்தொடர்பு துறை, சுழியம் குற்றவியல் பிரிவுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வரும் தமிழ் ராக்கர்ஸை முற்றிலும் தடைசெய்வது சாத்தியமா என்று தொழில்நுட்பவியலாளர் ஒருவரிடம் பெறப்பட்ட தகவலில்: நாம் நினைத்ததைவிட மிகவும் சாதுர்யமாக தமிழ் ராக்கர்ஸ் குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இதை நடத்துபவர்கள் தொழில்நுட்பத்தில் உள்ள ஓட்டையை நன்கறிந்தவர்களாகதான் இருக்க வேண்டும். ஏனெனில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலிருந்து ஒரு படத்தை பதிவிறக்கம் செய்பவரே, அதே படத்தை பதிவிறக்கம் செய்யும் மற்றொருவருக்கு தான் பதிவிறக்கம் செய்த தரவுகளை கொடுத்து உதவுவது போன்ற 'மடித்துப் பயன்படுத்துதல்' என்ற முறை பயன்படுத்தப்படுவதால், முதலில் யார் பதிவேற்றியது என்பதை கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட இயலாத காரியம் என்று கூறுகிறார்.

தற்போதுள்ள செயல்முறையின்படி, ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை தடைசெய்வதற்கு நீண்டகாலம் ஆகிறது. எனவே, இதுபோன்ற திருட்டுத்;; தொழில் இணையதளங்கள் புதுப்புது களங்களில் தொடங்கியவுடன் உடனடியாக தடைசெய்வதற்கு சிறப்பு குழுக்களை அமைப்பது தற்காலிக தீர்வாக அமையலாம்.

உலகம் முழுவதும் புதிய இணையதள முகவரிகள் பதிவுசெய்வதை கண்காணிக்கும், ஒழுங்குபடுத்தும் பணியை அமெரிக்காவை சேர்ந்த பெயர் எண்களுக்கான இணையக் குழுமம்  என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. தமிழ்ராக்கர்ஸ் என்ற சொல்லை முற்றிலும் தடைசெய்யக்கோரி இந்திய தொலைத்தொடர்புத்துறை அந்த அமைப்புக்கு கோரிக்கை விடுக்கும்பட்சத்தில் இது சாத்தியமாகலாம்.

ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை வாங்கி பதிவு செய்யும்போது தங்களது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை இணையதள சேவை வழங்கும் நிறுவனத்திடம் வழங்க வேண்டும்.

இந்நிலையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்தி வருபவர்கள் குறித்த தகவலை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறுவதற்கான வாய்ப்புள்ளதா என்று பார்த்தால், இணையதளத்தை பதிவு செய்பவர் நினைத்தால் கூடுதலாக கட்டணம் செலுத்தி அவர்களது தகவல்களை கமுக்கமாக வைத்துக்கொள்ளும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. எனவே, தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்கள் குறித்த விவரங்களை பெறுவது இயலாத காரியம் என்று தெரியவருகிறது. 

தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளத்தை நடத்துபவர்கள் தங்களது களம் ஒவ்வொரு முறை முடக்கப்படும்போதும் சாதாரணமான முறையில் புதிய களத்தைப் பதிவுசெய்வதில்லை  மாறாக, தனிப்பட்ட இணையச் சேவையை வாங்கிவிட்டு நிலையான முகவரியை வைத்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் எண்ணற்ற இணையதளங்களை உருவாக்கும் முறையை கடைபிடிக்கிறார்கள் என்று தெரியவருகிறது. அதுமட்டுமின்றி, இணையதளங்களை முறைப்படுத்துவதற்கென சர்வதேச சட்டங்கள் ஏதுமில்லாத காரணத்தால் குறிப்பிட்ட நாட்டின் அரசாங்கத்திடமோ, அமைப்பிடமோ இதுதொடர்பாக எவ்வித கோரிக்கை வைப்பதிலும் பயனில்லை. உதாரணமாக, தமிழ் ராக்கர்ஸ் ரஷ்யாவை மையமாகக்கொண்டு செயல்படுகிறது என்று வைத்துக்கொண்டால், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் ஐகான் போன்ற அமைப்புகள் விடுக்கும் கோரிக்கையை ரஷ்யா மறுப்பதற்கு வாய்ப்புள்ளது என்று தெரியவருகிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை நடத்துபவர்களை கண்டுபிடிக்க முடியாது. புதிய களங்கள் உருவாக்குவதை நிரந்தரமாக முடக்க முடியாது. சர்வதேச சட்டங்களை பயன்படுத்தியும் எதுவும் செய்யமுடியாது என்றால் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று கேள்விக்கு? 

இணையம் உருவான காலத்திலிருந்து மேற்கத்தியத் திரைப்படங்கள் இதுபோன்ற திருட்டுத் தொழில் தளங்களின் காரணமாக கடும் சவாலை சந்தித்து வருகிறது. ஆனால், இதுவரை எவ்வித முன்னேற்றத்தையும் மேற்கத்திய திரையுலகால் எட்டமுடியவில்லை. அதுமட்டுமின்றி, திருட்டுத் தொழில் இணையதளங்கள் மூலமாக பதிவிறக்கம் செய்யப்படும் மென்பொருள்களினால் ஒவ்வொரு ஆண்டும் மைக்ரோசாப்ட், அடோப் போன்ற நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான கோடிகளை இழந்துதாம் வருகின்றன. அதுவும் இதுவரை முற்றிலும் தடுக்கப்பட முடியாததாகவே உள்ளது. எனவே, மக்கள் இதுபோன்ற தளங்களை நாடுவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். என்பதே தமிழ் ராக்கர்ஸ் பாதிப்பிலிருந்து விடுபட திரையுலகம் செய்ய வேண்டியது ஆகும். 'திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்னும் எம்ஜியார் பாட்டில் சொன்னதுதான் தீர்வா? ஆம்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,969.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.