Show all

பிடித்தவர்களின் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதில் தமிழர்கள் கெத்து! சொந்த ஊரில் மாடி வீடு கட்டிய செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி

சொந்த ஊரில் மாடி வீடு கட்டிய செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி இணையரைப் பாராட்டி மகிழும் தமிழ் மக்கள். பிடித்தவர்களின் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதில் தமிழர்கள் கெத்து அல்லவா?

12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறந்தபாடகர் பருவம்6 நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. அவர்கள் மேடையில் பாடும் நாட்டுப்புறப் பாடல்களுக்கு, அவர்களே படைப்பாளர்கள். இருவரும்  வெவ்வேறு அணிகளில் பாடி தங்களது திறமையை நிரூபித்து வந்தனர்.

பிறகு தனது விடா முயற்சியால் செந்தில் கணேஷ் சிறந்தபாடகர் பருவம்6  தலைப்பைத் தட்டிச் சென்றார். நிகழ்ச்சி முடிந்த கையோடு சார்லி சாப்ளின் 2 படத்தில் 'என்ன மச்சான்” என்ற பாடலை இருவரும் சேர்ந்து பாடும் வாய்ப்பும் இவர்களுக்குக் கிடைத்தது.

அந்தப்பாடல் திரைப்படத்திலும் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தொடர்ந்து செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி இணைக்கு பாட வாய்ப்புகள் வருகின்றது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இருவரும் சேர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இந்த நிலையில் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர் தங்களின் சொந்த ஊரான களபத்தில் மாடி வீடு கட்டியுள்ளனர். புதுமனை புகுவிழாவின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் காணொளிகளை செந்தில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘என் தாய், தந்தையின் கனவை நிறைவேற்றி விட்டேன்’ என்று மிகவும் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவுக்கு தமிழ் மக்களும், தங்களுக்குப் பிடித்தவர்களின் முன்னேற்றத்தைக் கொண்டாடுவதில் தாங்களே கெத்து என்பதாக செந்தில் கணேஷ் -ராஜலட்சுமிக்கு வாழ்த்துக்களை வாரிவழங்கி வருகின்றனர். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,350.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.