Show all

மாணவிகள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை: மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே பங்காரம் எஸ்.வி.எஸ். இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவிகள் மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகியோர் கடந்த 23-ந் தேதி கல்லூரியின் அருகில் உள்ள விவசாயக் கிணற்றில் பிணமாக கிடந்தனர். அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

 

ஆனால் மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர்களைக் கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாகவும் அவர்களின் பெற்றோர் புகார் அளித்தனர்.

 

இதையடுத்து கல்லூரி தலைவர் சுப்பிரமணியன், தாளாளர் வாசுகி (சுப்பிரமணியன் மனைவி), இவர்களது மகன் சுவாக்கர் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, கல்லூரி ஆதரவாளர் வெங்கடேசன் ஆகியோர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலாநிதி, சுவாக்கர் வர்மா ஆகியோரை கைது செய்தனர். கல்லூரி தாளாளர் வாசுகி, சென்னை தாம்பரம் நீதிமன்றத்திலும், வெங்கடேசன் சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் சரண் அடைந்தனர்.

 

இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.  இதையடுத்து சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி தலைமையிலான குழுவினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தினர். இதனிடையே மாணவிகள் உயிரிழப்பில் சந்தேகம் என உயர;நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து 3 பேர் மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், விழுப்புரம் தனியார் கல்லூரி மாணவிகள் மோனிஷா, சரண்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கையை சென்னை உயர;நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

 

அதில், மாணவிகள் நீரில் மூழ்கி இறந்திருந்தால், அவர்களது நுரையீரல்களில் தண்ணீர் நிரம்பியிருக்கும். ஆனால், பிரேத பரிசோதனையில், அவ்வாறு இல்லை. எனவே, மாணவிகள் மூவரும் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதை அடுத்து, மறுபிரேத பரிசோதனை அறிக்கை தேவையா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாணவியின் பெற்றோர், இது குறித்து தங்களது மருத்துவர்களிடம்  ஆலோசனை பெற்ற பிறகே கூற முடியும் என்று பதில் அளித்ததை அடுத்து வழக்கு விசாரணை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.