Show all

கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள அறிக்கை

சென்னையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சமீபத்தில்  இணைய தளம் ஒன்றுக்கு நடிகர் கமல்ஹாசன் அண்மையில் அளித்த பேட்டியில், பலத்த மழை காரணமாக ஒட்டுமொத்த சென்னையும் நிலைகுலைந்துள்ளது. அரசு நிர்வாகம் முழுமையாகச் செயலிழந்துள்ளது. இதிலிருந்து மீண்டுவர இன்னும் பல மாதங்கள் ஆகும். மக்கள் வரிப் பணம் என்ன ஆனது எனத் தெரியவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கமலைக் கண்டித்து ஓர் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் இன்று  கமல்ஹாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அல்ல.

மின் அஞ்சல் வழி; வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக் கடிதம். அந்தக் கடிதத்தின் தோராயமான தமிழாக்கமே சில ஊடகங்களில் வெளியானது.

என் கடிதம் தமிழகத்திற்கு நேர்ந்த பேரிடர் பற்றியும் மக்களின் அவதியை பற்றிய புலம்பலே. கடிதத்தில் எங்கும் தமிழக அரசு என்ற குறிப்போ, என் வரிப் பணம் என்ன வாயிற்று என்ற கேள்வியோ இல்லை. அவ்வளவு சந்தேகம் இருந்திருந்தால் இவ்வளவு ஆண்டு தொடர்ந்து முழு வருமானத்தையும் சொல்லி அத்தனை வரி கட்டியிருக்கவே மாட்டேன்.

எந்த நிலைமையிலும் என் கடமையைச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். என் வீட்டிற்;கு சில நாட்களாக செய்தித் தாள் வினியோகம் இல்லை. விட்டு விட்டு வரும் தொலைப்பேசித் தொடர்பும், எப்போதோ வரும் வலையதள தொடர்பினாலும் என்னைப் பற்றி ஊடகங்களில் வரும் வாதப் பிரதிவாதங்கள் நண்பர்கள் சொல்லியே தெரிந்து கொண்டேன்.

எனது சில நண்பர்களைப் போல் எப்போதுமே ஒரு கண்ணை முகநூலில் வைத்திருக்கும் முகநூல் வாசியல்ல நான். பதில் ஏதும் பேசாமல் இருந்தால் உண்மை தன்னால் வெளிப்படும் என் உண்மை நிலை புரியும் என்று நான் எண்ணியது தவறு என உணர்கிறேன்.

என் நற்பணி இயக்கத்தாருடன் தொலைப்பேசி தொடர்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருவதினாலும், அவர்களை எந்த ஆர்பாட்டமுமின்றி மக்களுக்கு உதவும் அன்பு கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்ததாலும் அவையே முக்கியம் இந்த வாதங்களை பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

அது தவறு, அத்தவறு இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இது திரு. ஓ. பன்னீர் செல்வம் அவர்களின் அறிக்கைக்கு பதில் அறிக்கை அல்ல. களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கும், பல வேறு கட்சிகளுக்கும் ஓட்டு போடும் தன்னுரிமை உள்ள எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் குழப்பத்தில் நற்பணி செயல்களில் தடுமாற்றம் கண்டுவிடக் கூடாது என்பதற்கே இவ்விளக்கம்.

பக்தரும் பகுத்தறிவாளரும் பல மதத்தாரும் உண்டு எங்கள் இயக்கத்தில். இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம் மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல் பட வேண்டிய பேரிடர் காலம். களமிறங்கி வேலை செய்யும் யார் மனதையும் நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் புண்படுத்தியிருந்தால் கூட மன்னிப்புக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வாதப் பிரதிவாதங்களைப் புறந்தள்ளி ஆக்கவேலையில் முன் போல் முனையுங்கள். எனக்காக வாதாடும் எனது பல நெருங்கிய நண்பர்களும் என்னை கடுமையாக விமர்சிப்பவர்களும் அதையெல்லாம் விடுத்து செய்யும் உங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்ய மன்றாடுகிறேன். கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்.

தண்ணீரும் கண்ணீரும் வடிந்த பிறகும் கூட, சூழக்கூடும் என அஞ்சும் அபாயங்கள் அண்டாதிருக்க ஆவன செய்வோம். ஆளும் அரசு எதுவாக இருந்தாலும் அவர்களுடன் இணைந்து நற்பணிகளை 36 ஆண்டுகளாக எங்கள் இயக்கம் செய்து வருகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேராமல் எல்லோருடனும் சேர்ந்து ஒத்துழைப்பதே நற்பணிச் சேவைகளை தொடரும் அந்த சந்தோஷத்திற்க்காகவும் சவுகரியத்துக்காகவும்தான்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.