Show all

புதிய சட்டத் திருத்தம் வருகிறது! ஆதார் எண்ணைத் திரும்பப் பெற

21,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை இதுவரை நிர்பந்திக்கப் பட்டிருந்த சேவைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தை நடுவண் அரசு விரைவில் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியர்கள் ஒவ்வொருவரும் ஆதார் எனப்படும் தனிப்பட்ட 12 இலக்க எண்ணை அலைந்து திரிந்து வாங்கியாக வேண்டும் வழங்காத பல்வேறு சேவைகளுக்கு அது பயன்படுத்தப்படும் என்று நடுவண் அரசு இந்திய மக்களை நிர்பந்தித்தது.

எனது ஆதார், எனது அடையாளம் என்ற முத்திரையுடன் வழங்கப்பட்டுள்ள ஆதார் அட்டையை வலுப்படுத்த ஆதார் எண்ணை வருமானவரித்துறை அடையாள அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு வினியோகம் உள்பட பல்வேறு அடையாளங்களுடன்  ஆதார் அடையாளத்தை இணைக்க உத்தரவிடப்பட்டது.

பிறகு செல்பேசி செறிவட்டை வாங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆதார் அட்டையில் உள்ள தனிப்பட்ட நபர்களின் கமுக்கத் தகவல்கள் கசிந்து விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆதாரால் தனிப்பட்ட உரிமை சார்ந்த கமுக்கத் தகவல்கள் அம்பலமாவதால் மக்கள் நடுவே அதிர்ச்சியும் அதிருப்தியும் ஏற்பட்டன. இது தொடர்பாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதை விசாரித்த உச்சஅறங்கூற்றுமன்றம் ஆதார் அட்டை பயன்பாடு தொடர்பாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை வெளியிட்டது.

வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்க தேவை இல்லை என்று கூறப்பட்டது. அதுபோல செல்பேசி செறிவட்டைகள் வாங்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் உச்சஅறங்கூற்றுமன்றம் அறிவித்தது. ஆதாரை மற்ற துறைகளுக்கு கட்டாயம் என்று கூறுவது சட்ட விரோதம் என்றும் உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஆதார் ஆணையம் சில பரிந்துரைகளைக் கொண்டு வந்தது. அந்தப் பரிந்துரைகள் சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. சட்ட அமைச்சகம் அதை பரிசீலித்து, அனைத்துத் தரப்பு மக்களும் ஆதார் எண்ணை இதுவரை கொடுத்த துறைகளில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று திருத்தம் செய்தது.

தற்போது இந்தப் பரிந்துரை நடுவண் அமைச்சரவையிடம் பதிகை செய்யப்பட்டுள்ளது. நடுவண் அமைச்சரவையும் இதற்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக புதிய சட்ட திருத்தத்தை நடுவண் அரசு கொண்டு வர உள்ளது.

அந்தச் சட்ட திருத்தத்தில், ஆதார் கட்டாயம் இல்லை என்பதை உறுதிப்படுத்தும். மேலும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஆதார் எண்ணை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,994.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.