Show all

பத்து விழுக்காடு அதிகார உறுதிப்பாட்டு மசோதா! ஆதரவு அளித்த கருப்பாடுகளுக்கு எதிராக சாட்டையைச் சொடுக்கும் வன்னியரசு

26,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இடஒதுக்கீட்டு மசோதா என்ற பெயரில், மேல்தட்டு மக்களுக்கான பத்து விழுக்காடு அதிகார உறுதிப்பாட்டு மசோதாவை நிறைவேற்றிய பாஜகவின் முயற்சிக்கு சோரம் போன கருப்பாடுகளுக்கு எதிராக சாட்டையைச் சொடுக்கியுள்ளார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு. 

வன்னியரசு வெளியிட்ட அறிக்கையில்: முன்னேறிய உயர் வகுப்பினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டு மசோதா இரு அவையிலும்  நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் அ.தி.மு.க உறுப்பினரும் மூத்த தலைவருமான தம்பிதுரை கடுமையாக இடஒதுக்கீட்டுக்கு எதிராகப் பேசினார். ஆனால், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. 

அதேபோல பாட்டாளி மக்கள் கட்சியின் ஒற்றை உறுப்பினர் அன்புமணிகூட எதிர்த்து வாக்களிக்காமல் வெளியே ஓடிவிட்டார். வெளியே பேசுவது சமூகநீதி, ஆனால் சட்டமியற்றும் அவையில் பாஜகவோடு மறைமுக கூட்டு சேர்ந்து சமூகநீதிக்கு எதிராக செயல்பட்டுள்ளார். 

ஏற்கெனவே, சபரிமலைக்குப் பெண்கள் செல்லக்கூடாது என்ற ஐதீகத்தை ஆதரித்துப் பேசியவர்தான் அன்புமணி. (முதலில் அன்புமணிக்கு யாராவது சமூகநீதி தொடர்பாகவும் சனாதனம் தொடர்பாகவும் வகுப்பெடுத்தால் நல்லது). இது இப்படி இருக்க, மாநிலங்களவையில், இந்த இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிராக, திமுக உறுப்பினர் கனிமொழி கடுமையாகப் பேசினார். இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க கேட்டுக்கொண்டார்.

ஆனால், கனிமொழியின் குரல் அங்கு எடுபடவே இல்லை. அதைவிடக் கொடுமை, இடதுசாரிகள் தமக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கும் வேளையில், மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினரான டிகே.ரங்கராஜன் மசோதாவை ஆதரித்துப் பேசினார். 

இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் ஆம் ஆத்மி கட்சியுமே கனிமொழியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்றன. சமூக நீதிக்கொள்கையை குழிதோண்டிப் புதைக்கவும் இடஒதுக்கீட்டுக் கொள்கையையே அழித்தொழிக்கும் முயற்சியில் ஈடுபடும் பாஜக-வின் சதித்திட்டத்தை மார்க்சிய கம்யூனிஸ்டுகளும் ஆதரிப்பது எதிர்காலத்துக்கு ஆபத்தானதாக அமைந்துவிட்டது.

காங்கிரஸ் கட்சியும் பாஜக-வோடு இணைந்து இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்து விட்டது. இப்போது, பாஜக வகுத்தளித்த பாதையில்,  காங்கிரஸ் கட்சியும் மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியும் பயணிப்பது ஜனநாயகத்துக்கும் அரசியலமைப்புச் சட்டத்துக்கும் பேராபத்தாக அமைந்துவிட்டது. பொருளாதாரக் கொள்கைகளும் சமூகநீதிக் கொள்கைகளும் பாஜக-வுக்கும் இடது சாரிகளுக்கும் ஒன்றுதானா. மாற்றுக்கொள்கைகள் இல்லையா. வர்க்க பார்வையும் வருண பார்வையும் ஒன்றாக இருக்கிறதே என்று தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,028.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.