Show all

திகார் சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

தில்லியில் உள்ள திகார் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திகார் சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் என தனித்தனி வார்டுகளில் அடைக்கப்பட்டுள்ளனர். வார்டு எண் 1-ல் இருந்த விசாரணைக் கைதிகள் 3 பேரை மருத்துவப் பரிசோதனைக்காக சிறைக்காவலர்கள் நேற்று அழைத்து சென்றனர். பின்னர், அவர்கள் தங்கள் வார்டுக்கு மதியம் திரும்பி வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த 3 கைதிகள் திடீரென அவர்களைக் கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர். பதிலுக்கு விசாரணை கைதிகளும் தாக்கினர்.

இதனைக் கண்ட அங்கு பாதுகாப்புக்கு இருந்த தமிழ்நாடு சிறப்பு காவலர்கள் மற்றும் திகார் சிறை காவலர்கள் விரைந்து சென்று மேலும் மோதல் நடக்காமல் தடுத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த விசாரணை கைதி ஈஸ்வர், அனில் ஆகியோர் தில்லியில் உள்ள தீனதயாள் உபாத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயம் அடைந்த மற்ற 4 கைதிகளும் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கைதிகள் மோதலில் 4 காவலர்களும் காயம் அடைந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த விசாரணைக் கைதிகள் ஈஸ்வர், அனில் ஆகியோர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். மோதலில் ஈடுபட்ட கைதிகள் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த மோதலுக்கு காரணம் என்ன? என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.