நடிகர் சங்க நிலத்தை ரூ.2 கோடியே 48 லட்சம் கொடுத்து
மீட்டுவிட்டதாக நடிகர்கள் கார்த்தி, பொன்வண்ணன் கூறினார்கள். தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர்
பொன்வண்ணன் ஆகியோர் சென்னை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் நேற்று நிருபர்களுக்கு
பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது: நடிகர்
சங்க அறக்கட்டளை மூலம் 2010-ல் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக, எஸ்.பி.ஐ.
சினிமாஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் கடந்த நிர்வாகத்தால் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த
ஒப்பந்தம் 9 பேர் கொண்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் 2 பேர் மட்டுமே கொண்டு போடப்பட்டதால்
அது அறக்கட்டளை சட்டப்படி தவறானது என சங்க உறுப்பினர் பூச்சி முருகன் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர்களும் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி பல முறை கோரிக்கைவைத்தோம். அது நிறைவேறாததால்
தேர்தலில் நின்றோம். வெற்றியும் பெற்றோம். நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தபடி
பதவிக்கு வந்தவுடன், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய, தனியார் நிறுவனத்துடன் பல முறை
பேச்சுவார்த்தை நடத்தினோம். அதிலுள்ள சட்ட சிக்கல்களை விவாதித்தோம். முடிவில் அந்த ஒப்பந்தத்திற்காக கொடுக்கப்பட்ட ரூ.48
லட்சம் மற்றும் பத்திரப்பதிவுக்காக கொடுக்கப்பட்ட ரூ.1 கோடியே 41 லட்சம், கடந்த 2 வருடங்களாக
நடிகர் சங்க அலுவலுக்கு மாதாந்திர செலவுகளுக்கு கொடுக்கப்பட்ட ரூ.59 லட்சத்தையும் சேர்த்து
2 கோடியே 48 லட்ச ரூபாயை அந்த நிறுவனத்துக்கு திருப்பி கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி அந்த தொகையை கொடுத்து நேற்று ஒப்பந்தத்தை ரத்து செய்து நிலம் மீட்கப்பட்டது
என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். முதலீடு செய்த பணத்திற்கான வட்டியை ரத்து செய்து
எதிர்காலத்தில் நடிகர் சங்கத்துடன் என்றும் ஒத்துழைப்போம் என்று கூறிய எஸ்.பி.ஐ. சினிமாவிற்கும்,
ரூ.2 கோடி கொடுத்தால்தான் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியும் என்ற சூழ்நிலையில் குறுகிய
காலத்தில் ரூ.2 கோடியை பெற்று தந்த சங்க அறக்கட்டளை அறங்காவலர் ஐசரிகணேசுக்கும் நன்றி
தெரிவித்துக்கொள்கிறோம். நடிகர் சங்க உறுப்பினர்கள் கணக்கெடுக்கும் பணி
45 நாட்களாக நடந்து முடிவடைந்துள்ளது. 2200 உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இவை இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு அரசு உதவிகள், வேலைவாய்ப்புகள் பெற்று தரப்படும்.
விரைவில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப்பணிகள்
தொடங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். நடிகர் பிரபு கண்கலங்க கூறும்போது, ‘நம் முன்னோர்கள்
நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் எழுப்பினார்கள். அந்த
இடத்தை புதியவர்கள் மீட்டுள்ளனர். எல்லோரும் ஒற்றுமையாக இருந்து புதிய கட்டிடத்தை கட்ட
வேண்டும்’ என்றார். நடிகர் சங்க அறங்காவலர் பூச்சிமுருகன் கூறும்போது,
‘கட்டிட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விட்டதால் நீதிமன்றத்தில் நான் தொடர்ந்துள்ள
வழக்கை வாபஸ் பெறுவேன்’ என்றார். பேட்டியின்போது நடிகர்கள் சத்யராஜ், கருணாஸ், ஐசரிகணேஷ்,
கோவை சரளா, லலிதா குமாரி, சங்கீதா, ஜூனியர் பாலையா, சோனியா, பசுபதி, ஸ்ரீமன், டி.பி.கஜேந்திரன்,
உதயா ஆகியோர் உடன் இருந்தனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.