Show all

லாரன்ஸ் ரூ.1கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார்

பிரபல இயக்குனர், நடிகர், நடன இயக்குனர் என பல அவதாரங்களில் ஜொலித்து வரும் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது. ராகவா லாரன்ஸ் ஒரு சினிமாக்கலைஞராக மட்டுமின்றி சமூக தொண்டிலும் தன்னை இணைத்து கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. பெற்ற தாய்க்கு கோயில் கட்டியது, ராகவேந்தருக்கு கோயில் கட்டியது ஆகியவை இவரது உயர்ந்த உள்ளத்தை காட்டியது. மேலும் இவர் லாரன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் ஊனமுற்ற குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கு நடனப்பயிற்சி, இல்லம், கல்வி, வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு, மருத்துவம் ஆகிய உதவிகளை செய்து வருகிறார்.

இவரது அறக்கட்டளை “லாரன்ஸ் சேரிட்டபிள் ட்ரஸ்ட்” என்கிற பெயரில் சென்னையில் அரசாங்கம் சாராத “தன்னார்வ தொண்டு நிறுவனமாக” 2006 ஆம் ஆண்டில் இருந்துஇயங்கி வருகின்றது. மேலும் 6 மாதகாலத்திற்கு ஒருமுறை அறக்கட்டளை கூட்டம் நடத்தப்பட்டு நிதி உதவி அளிப்பவர்களுக்கு வருமான வரி விலக்கு சான்றிதழும் அளிக்கப்பட்டு மிகவும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என்ற கனவை நிறைவேற்றும் வகையில் ராகவா லாரன்ஸ் அவர்களின் ரசிகர்கள் ஒன்றிணைந்து 'கலாமின் காலடிச்சுவட்டில்' என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகிறார். இந்த அமைப்பிற்கு லாரன்ஸ் ரூ.1கோடி நிதியுதவி செய்வதாக அறிவித்துள்ளார். மற்றவர்கள் போல் அவரது கனவை நிறைவேற்றுவோம் என்று வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் உடனடியாக செயலில் இறங்கி அதற்கு நிதியுதவியும் அளித்த ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.