Show all

‘தமிழன் என்று சொல்’ படத்தில் நடித்து வருவதாக விஜய்காந்த் அறிவிப்பு

தேர்தல் தோல்விக்குப் பிறகு, தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வருவதாக விஜய்காந்த் அறிவித்துள்ளார்.

 

2010-ல் விருதகிரி படத்தில் ஹீரோவாக நடித்த விஜயகாந்த் பிறகு அரசியல் தீவிரமாக கவனம் செலுத்தியதால் படங்களில் நடிக்காமல் இருந்தார். பிறகு சமீபத்தில், தனது இளைய மகன் சண்முக பாண்டியனுடன் இணைந்து

‘தமிழன் என்று சொல்’ என்கிற படத்தில் நடிக்க சம்மதம் அளித்தார். அருண் பொன்னம்பலம் இயக்கும் இந்தப் படத்துக்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். சகாப்தம் படத்துக்குப் பிறகு சண்முக பாண்டியன் நடிக்கும் 2-வது படம் இது.

 

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. அப்போது விஜய்காந்த் கூறும்போது, அரசியல் பிரவேசத்துக்குப் பின்னர் திரைப்படத்தில் நடிக்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்தேன். சண்முகபாண்டியன் நடித்து வருவதால், அவருக்காக எனது மனைவி பிரேமலதாவும், மூத்த மகன் விஜய் பிரபாகரும் பல கதைகளைக் கேட்டு வந்தனர். அப்போது நானும் இந்தக் கதையைக் கேட்டேன். அரசியலில் பல பணிகள் என்று சொல்லி விலகியபோதும், என் மூத்த மகன் விஜய் பிரபாகர் கேட்டுக் கொண்டதால் நடிக்க வந்தேன். சண்முக பாண்டியனுக்காக இந்தப் படத்தில் நடிக்கவில்லை. இது என் மொழி படம். தமிழுக்காகவும், இந்தக் கதையில் இருந்த தமிழ் உணர்வுக்காகவும் மீண்டும் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்றார்.

தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வருவதாக தனது சுட்டுரை பக்கத்தில் விஜய்காந்த் அறிவித்துள்ளார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.