Show all

சோழர் ஆட்சிமுறை அறிவோம்!

15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் மட்டுமே ஆட்சி மொழியாகவும், நிருவாக மொழியாகவும், தழைத்து வளர்ந்தும் வந்த தமிழகத்தை: சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் அரச மரபினர் ஆட்சி புரிந்து வந்தனர். அதில் சோழர்கால ஆட்சி மட்டுமே தமிழகத்தில் நீண்ட காலம் ஆளப்பட்டதும், வெளிநாடுகளிலும் தமது ஆட்சியைப் பரப்பியதும் ஆகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர் ஆட்சி மிக உச்சத்தில் இருந்தது. பூம்புகார், உறையூர், பழையாறை, தஞ்சாவூர் கங்கைகொண்ட சோழபுரம் ஆகியன வௌ;வேறு காலங்களில் தலைநகரங்களாக இருந்தன. 

சோழர் காலத்தில் முதன்முறையாகத் தென்னிந்தியா முழுவதும் ஒரே அரசின் கீழ் இருந்தது. உழவுக்கும் தொழிலுக்கும் மிகுந்த முதன்மைத்துவம் அளித்தனர். வாணிகக்குழுக்கள் அமைத்தல், வெளிநாட்டுக்கு தூதுக் குழுக்களை அமைத்தல் என உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாணிகத்தை வளர்த்தனர். நாட்டு நிர்வாகத்திலும் நியாய விசாரனையிலும் சோழர்கள் காலத்தில் பல அறிவுப்பூர்வமான மாற்றங்கள் விளைந்தன. கிராமங்களில் ஊராட்சி தழைத்தோங்க வாரியங்கள் அமைத்தனர். நியாய முறையையும் நிலைக்கச் செய்தனர். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு மேற்கு தெற்கு எனக் கடலால் சூழப்பட்ட இந்தியத் தீபகற்பம் முழுவதும் சோழர்களின் ஆட்சியே நிலவியது எனலாம். இவர்களின் வடக்கு எல்லை துங்கபத்திரை, கோதாவரி ஆறுவரை பரவியிருந்தது. இராசராசன் மற்றும் இராசேந்திரன் காலத்தில் சோழப்பேரரசு கடல் கடந்தும் பரந்து விரிந்தது. சோழப்பேரரசின் தலைநகரங்களாக உறையூர், பழையாறை,தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகியன இருந்தன. காஞ்சிபுரம், மதுரை ஆகியவை சிறப்பு வாய்ந்த முதன்மை நகரங்களாகத் திகழ்ந்தன.

சோழர்களின் அரசில் அரசர்கள், உயர்நிலைத் தலைவனாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்தனர்.

உரிய இடத்தில் அமர்ந்து மன்னன் விண்ணப்பங்களைக் கேட்பார். அரசர் ஆணையே சட்டம். முறையீடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு வாய்மூலமாகக் கட்டளைகள் பிறப்பித்தல் அரசனுடைய நிர்வாகக் கடமையாக இருந்தது. இவற்றிற்குத் திருவாய்க் கேள்விகள் என்று பெயர். இவ்வாணையை உரியவருக்கு எழுத்து மூலம் அனுப்புகின்றவனுக்கு, திருவாய்க் கேள்வி என்றே பெயர். மன்னன் ஆணையைக் கோட்டத்து அவையினரான நாட்டார்கள் முதலியோர் நிறைவேற்றி வைப்பர்.

அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சமயங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராசேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.

கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. காலாட்படையில் சிறப்பிடம் பெற்ற படை கைக்கோளப்படை. இவர்கள் தவிர வில்லெறியும் வில்லாளிகள், வாள்படைவீரர்கள் என்போரும் இருந்தனர். வலங்கை, இடங்கை என இரு வகைப் பிரிவினர்கள் இருந்தனர். அரசருக்கு அணுக்கத்திலே இருக்கும், வேளகாரர் என்போர் இருந்தனர். முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்தில், மூன்றுகை மகாசேனை என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது.

சோழப் பேரரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.அவை 

1.சோழ மண்டலம்

2.இராசராசப் பாண்டி மண்டலம்

3.செயங்கொண்ட சோழ மண்டலம்(தொண்டைநாடு)

4.மும்முடிச் சோழமண்டலம்(ஈழம்)

5.முடிகொண்ட மண்டலம்(கங்கபாடி நாடு)

6.நிகரிலிச் சோழமண்டலம்(நுளம்பாடி,பல்லாரிப்பகுதிகள்)

7அதிராசராச சோழமண்டலம்(கொங்கு)

8.மலைமண்டலம்(கேரளம்)

9.வேங்கை மண்டலம்(கீழைச் சாளுக்கியம்)

என்பனவாகும். சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது. கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

மண்டலங்கள், ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன. இளவரசர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர். மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது. நடுவண் அரசுக்கும், மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும். கோட்டங்கள் மட்டத்திலிருந்த நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர்.

ஆட்சிக்கு உறுதுணையானோர் உடன்கூட்டத்து அதிகாரிகள் ஆவர். அமைச்சர்களும் இவர்களில் அடங்குவர். அரசாங்கத்திலோ படியிலோ உள்ள சிறந்தவர்கள் அதிகாரிகள் என்ற சிறப்புப் பெயர் பெறுவர். இவர்களுல் சிறுதரம், பெருந்தரம் என்ற இரு பிரிவுகள் இருந்தன. தீர்ப்பு அளிப்பவர்கள், நியாயத்தார் எனப்பட்டனர். 

இவர்கள் ஒரு கிராமம் முழுவதுமோ பகுதியாகவோ இவர்களுடைய ஊதியமாகத் தரப்பட்டது. இவற்றுக்கு சீவிதம் என்று பெயர். இறையிலி நிலங்களும் உண்டு. இந்நிலத்தில் அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு.

அரசனின் ஆணைகளை கோட்டத்து அவையினர் என்போர் நிறைவேற்றுவர். மேலும் நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், தேவதானத்து ஊர்களிலார், பள்ளிச்சந்தங்கள், கண்முற்றூட்டு, வெட்டிப்போறு, நகரர்கள் ஆகியோரும் நிறைவேற்றி வைப்பர். நாட்டார் அவையான நாடும் பிரம்தேயச் அவையும் ஊரவையும் அரசாணையின் மேல் பிறப்பித்த கட்டளைகளை ஆவணத்தில் எழுதி வைத்திருப்பர். நடுவத்தன் காரணத்தான் என்பவரே எழுதுபவர். அவைத் தலைவனுக்குத் திருவடிகள் என்ற பெயர். தானம் செய்யப்பட்ட ஊரின் எல்லைகளைக் குறித்த அரசாங்க அலுவலர் நால்வர் உண்டு.

குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவை தவிர உழுதுண்மக்கள் என்ப்படும் உழவர்கள் குழுக்களுக்கு சித்திரமேழி என்ற பெயர் இருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம அவைகள், ஊர் அவைகள், நகர அவைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. அவையில் ஆட்டைவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்ச வாரியம், பொன்வாரியம் எனப்பல பிரிவுகள் இருந்தன. இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன. உறுப்பினர் தேர்வு குடவோலை முறைப்படி நிகழும். இந்த அவையானது பெருங்குறி எனப்படும். வாரிய உறுப்பினர்கள், வரிய பெருமக்கள் எனப்படுவர். இந்த அவைகளும் வாரியங்களும் மரத்தடிகளிலேயே கூடும்.

குடவோலை முறை வாக்கெடுப்பு என்பது வாக்களிப்பவர் ஒவ்வொருவரும், வாரிய உறுப்பினர் ஆவதற்கு தகுதியானவர் என்று தாம் கருதுகிற ஒருவரின் பெயரை வழங்கப் பட்ட துண்டு வோலையில் எழுதி குடத்திற்குள் போட வேண்டும். அந்தக் குடத்திற்குள் இருக்கும் வோலைகளில் ஒன்றை பெண்குழந்தையை விட்டு எடுக்க வைத்து யாருடைய பெயர் வருகிறதோ அவரை உறுப்பினராக அறிவிப்பார்கள்.

கட்சிகளே வேட்பாளர்களை அறிவிப்பதற்கு பதிலாக, வாக்களிக்கும் ஒவ்வொருவருக்கும், சோழர்காலத்து குடவோலை முறை போல வேட்பாளர் பெயரை எழுதி கொடுக்கும் வாய்ப்பை வழங்கி அதில் அதிகமான மக்களால் முன்மொழியப் பட்டவரை சட்டமன்ற உறுப்பினராகவோ, பாராளுமன்ற உறுப்பினர்களாகவோ இன்றைக்குத் தேர்ந்தெடுப்போமேயானால், உண்மையான மக்களாட்சித் தத்துவமாக அமைய முடியும்.

அரசாங்கத்தின் முதன்மையான வருவாய் நிலவரி. எனவே நிலம் அளக்கப்பட்டு தர வாரியாகப் பிரிக்கப்பட்டு வரி வசூல் செய்யப் பரவுரித் திணைக்களம் என்ற அமைப்பு இருந்தது. இதன் தலைவர் பரவுரித் திணைக்களநாயகம் என அழைக்கப்பட்டார். மேலும் கண்காணி வரிப்பொத்தக நாயகம், வரியிலீடு முகவேட்டி, பாலோடை எனப் பலர் இருந்தனர். இவர்கள் நிலத் தொடர்பான அலுவல்களைப் புரிந்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்;ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,69,988.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.