28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  யார் தமிழர்? தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழர். ஆரியர்கள் தங்களுக்கான தாய்மொழியை இழந்து தமிழையே தங்களுடைய தாய் மொழியாக்கிக் கொண்ட பிறகு, இந்த எளிமையான அடையாளம் கேள்விக்கு உள்ளானது. 

ஏனென்றால், ஆரியர்கள் தங்களைத் தமிழர்களைக் காட்டிலும் உயர்வானவர்களாகக் கற்பித்துக் கொண்டார்கள். தமிழர்களையும் தங்களையும் தொழில் அடையாளத்தால், வேறுபடுத்தினார்கள். வேறுபடுத்தினார்கள் என்பதை விட பாகுபடுத்தினார்கள் என்ற வகையில்தான் சிக்கல் தொடங்கியது.

நாட்டை ஆளும் மன்னர், வேளாண்மை செய்யும் உழவர், உள்ளிட்டு, அனைத்து தொழில் புரிந்தவர்களையும் தங்களை விடத் தாழ்ந்தவர்கள் என்று தமிழ்மன்னர்கள் துணையோடே கற்பித்தார்கள். தொழில் அடிப்படை சாதி அடிப்படையானது. சாதி அடிப்படை பிறப்பு அடிப்படையாகிப் போனது. அதனால் தொழில் மாறினாலும் சாதி மாறாத நிலை ஏற்பட்டது.

சாதி அடிப்படையில் இந்தச் சாதியை விட இந்தச் சாதி தாழ்ந்தது என்று சாதிகளுக்கிடையிலான ஒரு வரிசை முறையை உருவாக்கிக் கொண்டு, ஆரியர் எல்லோரையும் விட உயர்ந்தவர், அடுத்தது இந்தச்சாதி, அதற்கடுத்தது இந்தச்சாதி என்று ஒரு வரிசை முறை பின்பற்றப் பட்டது. தமிழ் பேசுகிறவன் தமிழன் என்கிற அடையாளம் காணாமல் போனது. 

ஆரியர்களை அடுத்து வந்த ஐரோப்பியர்கள் எந்தச் சாதி? அவர்கள் ஆங்கிலத்தால் அறியப் பட்டார்கள். அப்போதுதான் நாம் தமிழர் என்கிற உணர்வு மீட்டெடுக்கப் பட்டது. 

அந்தத் தமிழ் அடையாளத் தளத்தில் பல ஆரியர்களும் இருந்தார்கள். வவேசு ஐயர், சுப்பரமணிய பாரதியார், பரிதிமாற்கலைஞர் இப்படிப் பலர். 

இந்த வரிசையில், தமிழைத்  தாய்மொழியாகக் கொண்டவர்கள், சாதிய அடையாளத்தை புறந்தள்ளி, தமிழ்மொழி அடையாளத்தை தூக்கிப் பிடிக்கிறவர்கள் தமிழர்கள் என்கிற புதிய வரையறை பின்பற்றப் பட்டு வருகிறது.

இந்த வட்டம் பெரிதாக வளரவில்லை. ஆனால் பாவாணர், மறைமலை அடிகள், காசுப் பிள்ளை, பாவலரேறு பெருஞ்சித்திரனார், என வலுவாக நின்றது.

மொழி அடையாளத்தை தூக்கிப் பிடிக்காமல், தாங்கள் ஆரியர்கள் அல்லாதவர்கள் என்கிற திராவிடர் என்கிற புதிய சாதி பிறந்தது. அதில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜியார், செயலலிதா, ஸ்டாலின், மணியம்மை, கி.வீரமணி, எடப்பாடி பழனிச்சாமி, தினகரன், ஓ.பன்னீர் செல்வம் என்று பெரிய பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. 

இன்றைக்கு 'தமிழைத் தாய்மொழியாகக் கொண்டு தமிழ் அடையாளம் பேணுவோரே தமிழர்' என்கிற பாவாணர், மறைமலை அடிகள், காசுப் பிள்ளை, பாவலரேறு பெருஞ்சித்திரனார் வட்டம் பெரிதாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வட்டத்தில் மேதகு பிரபாகரன் அவர்களை போற்றிக் கொள்ள விதி இருக்கிறது. 

திராவிடச் சாதி வட்டம் மேதகு பிரபாகரன் அவர்களைக் கைவிட்டு விட்டது. தமிழீழத்தைக் கைவிட்டு விட்டது. கச்சத் தீவைக் கைவிட்டு விட்டது. தமிழக மீனவர்களை கைவிட்டு விட்டது. இப்படி தனது அரசியல் தொழிலுக்காக தமிழர் அடிப்படை எதையும் கைவிடத் தயாராகவே யிருக்கிறது. 

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும், தமிழ்அடையாளம் பேணாமல், 1.ஹிந்துத்துவா பேணுவோர் 2.திராவிடம் பேணுவோர் 3.மார்க்சியம் பேணுவோர் 4.மற்ற மற்ற மதங்கள் பேணுவோர் 5.ஆரியர்களாக பெருமிதம் கொள்வோர். 6. தமிழினத்தை பாகுபடுத்துவதற்காக ஆரியர் வகுத்துத் தந்த சாதியம் பேணுவோர் 7.ஐரோப்பியம் பேணுவோர் 8.ஆங்கிலம் பேணுவோர் இவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர். தமிழ்பேசத் தெரிந்தவர்கள்; எச்.இராஜா, சுப்பிரமணிய சாமி, தமிழிசை போல.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,909.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.