Show all

தன் குழந்தையின் சரளமாக பேசும் ஆற்றலைத் தடைபடுத்தி நீட்டிக்கிறார்! ஆங்கில மோகமுள்ள தாய்

ஆங்கில மோகத்தால், தனக்குப் பிறக்கும் பிள்ளையை ஆங்கிலப் பிள்ளையாக மாற்றி விட முடியாது. ஆங்கிலமோகத் தாயுக்கும் பிறக்கும் குழந்தை, தமிழ்க்குழந்தையாகவே பிறக்கும். மொழியாற்றல் என்பது மரபியல் சார்ந்தது. எந்தத் தமிழ்க்குழந்தைக்கும் பிறப்பிலேயே தமிழ் இயல்பாக வரும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி எதுவும் தமிழுக்கு முன்பாக பயிற்றுவிக்க முடியாது.

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தனிப்புலமை.1, தொழில்.2, வேலை.3, இந்த மூன்று தளங்களில் ஏதாதொன்றில் தன்னைப் பிணைத்துக் கொண்டு இயங்குவதே மனித இயல்பு. 

ஒவ்வொரு தமிழகத்துக் குழந்தைக்கும் தனிப்புலமையையோ, தொழிலையோ முன்னெடுத்து வெற்றி பெறுவதற்கு தமிழகத்தில் இயல்பான அறிவோடு, தமிழ் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. வேலையில் உடலுழைப்பு தளத்தை முன்னெடுத்து பிழைப்பு நடத்துவதற்கும் தமிழகத்தில் இயல்பான அறிவோடு, தமிழ் மட்டுமே போதுமானதே.

ஆனால் வேலையில் நிருவாகத் தளத்தை முன்னெடுத்து வெற்றி பெறுவதற்கு தமிழ்மட்டுமே போதுமானதாக இல்லை. உலகளவிலாக ஆங்கிலம், இந்திய அளவில் சிலதனியார் நிறுவனங்களுக்கும், நடுவணரசிலும் ஹிந்தியும் நிர்பந்திக்கப் படுகிறது.

மிகப் பெரும்பாலான தமிழகப் பெற்றோர்கள், தம் குழந்தைகளை, 'வேலையில்- நிருவாகத்தளத்தை' முன்னெடுத்து வெற்றிபெறச் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். பல்லாயிர ஆண்டுகால அடிமைத்தனம் அதை அவர்களுக்கு அனுபவ அறிவாகக் கற்றுத் தந்திருக்கிறது.

இந்தியாவிலேயே மருத்துவக் கல்லூரிகளும், மருத்துவமனைகளும் தமிழகத்தில்தாம் மிக அதிகம். மருத்துவம்: சித்த மருத்துவம், இயற்கை மருத்துவம் தவிர்த்து அல்லோபதி, மற்றும் ஓமியோபதி ஆங்கிலத் தொன்மம் சார்ந்ததாகவே உள்ளன. 

தமிழகத்தில் பல பிரபல மருத்துவமனைகள் ஆங்கிலத் தொன்மங்களோடு தங்கள் தனிப்புலமையில் தொன்மங்களை இயற்றி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழில் அவைகளை பதிப்பிக்க வேண்டும் என்கிற எண்ணமில்லாத வணிக நோக்குடையவர்களாக இருக்கின்றனர். தமிழக அரசில் அமைகிற கட்சியும் கொஞ்சகாலமாக தமிழ் தொன்மங்களில் இயங்க வில்லை. தமிழ்த் தொன்மங்களில் இயங்க வேண்டும் என்கிற ஊக்கம் அண்ணாவோடு முடிந்து போனது.

இந்த நிலையில்தாம் நடுவண் அரசில் பொறுப்பேற்ற பாஜக: மருத்துவத்துறையை ஹிந்தியில் தொன்மங்களாக்க முயன்று 'நீட்'டை முன்னெடுத்திருக்கிறது.   தம் குழந்தைகளை, 'வேலையில்- நிருவாகத்தளத்தை' முன்னெடுத்து வெற்றிபெறச் செய்வதிலேயே குறியாக இருக்கிற மிகப் பெரும்பாலான தமிழகப் பெற்றோர்கள்: 

1.நடுவண் அரசின் பொறுப்பில் இருக்கிற நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய கல்வித்திட்டம், 2.மருத்துவம், மற்றும் நிருவாகத் தொன்மங்களை தன்னகத்தே கொண்ட ஆங்கிலம்- 
இந்த இரண்டையும் தங்கள் குழந்தைகளிடம் திணிக்க முயல்வதோடு, இன்னும் ஒரு படி மேலே சென்று தமக்கு ஆங்கிலக் குழந்தை பிறந்து விட வேண்டும் என்று தாமும் ஒரு ஆயிரம் ஆங்கில இடுகுறிச் சொற்களைக் கற்று தேறுகிறார்கள்.

தனக்குப் பிறந்த தமிழ்க் குழந்தை: இயல்பாக மொழியாற்றல் பெறும் போக்கை மாற்றி, தனக்குத் தெரிந்த ஆயிரம் இடுகுறி சொற்களை மட்டுமே அந்தக் குழந்தை மீது மீண்டும் மீண்டும் திணித்து அந்தக் குழந்தையின் மரபியலிலேயே பதிவாகியுள்ள தமிழ் கற்கும் ஆற்றலைச் சிதைத்து, ஆங்கிலமும் கற்கச் செய்ய முடியாமல் அந்தக் குழந்தையை முடமாக்குகிறாள், ஒரு ஆயிரம் இடுகுறிச் செற்களை கற்ற ஆங்கில மோகத்தாய்.

தமிழ்க்குழந்தையின் மரபியலில் தமிழ்மொழியின் இலக்கணக்கூறுகள் எல்லாம் அறிவாகப் பதிவாகியிருக்கும். ஆங்கில இலக்கணக்கூறுகள் முற்றிலும் தமிழ் இலக்கணக் கூறுகளுக்கு வேறானவை. ஆங்கில மோகத்தாய்க்கு ஆங்கில இலககணக் கூறுகள் எல்லாம் தெரியாது. மம்மி, டாடி, எஸ், நோ, ரெயின், ஒன், டூ, ரெட், கிரீன் இப்படி ஒரு ஆயிரம் இடுகுறிச் சொற்கள் தாம் ஆங்கிலத்தில் தெரியும்.

'உன்னுடைய பெயர் என்ன?' என்ற தமிழ் இலக்கணக்கூறை மாற்றி 'என்ன இருக்கிறது உன்னுடைய பெயர்?' (வாட்-என்ன,  ஈஸ்- இருக்கிறது,  யுவர்- உன்னுடைய. நேம்- பெயர்.) ஆங்கிலத்தில் கேட்கப் பழக வேண்டும். அதனாலேயே ஆங்கில மோகத்தாயிடம் வளரும் பிள்ளைகள் ஆங்கிலம் பேசக் கற்கப்போய், 'அன்னநடை கற்கப் போய் தன்னடையும் இழந்தாற் போல' என்கிற பழமொழிக்கு ஒப்ப, பேச்சு கற்கவே தாமதமாகிறது. இரண்டு அகவையிலிருந்தே சரளமாக தமிழ் பேச வேண்டிய தமிழ்க்குழந்தைகள், ஆங்கில மோகத்தாய் விரும்பும் தங்கிலீசில் சரளமாகப் பேச மூன்று நான்கு அகவையாகி விடுகிறது. 

ஆனாலும் குழந்தைகள் தாயின் நோக்கத்தை முறியடித்து, தனிப்புலமை.1, தொழில்.2, வேலையில் உடலுழைப்பு.3, ஆகியவற்றில் தமக்கு இயல்பான ஒன்றில் தம்மைப் பிணைத்துக் கொண்டு வெற்றி பெறுகின்றன அல்லது பிழைப்பு நடத்துகின்றன. 

மிகச் சில பிள்ளைகளே தங்களின் இயல்பும் பெற்றோர்களின் நோக்கமாகவே இருக்கிற நிலையில், பெற்றோர் விரும்பிய வேலையில் நிருவாகத்தைத் தேர்ந்தெடுத்து தங்கிலீஸ், அல்லது மணிப்பிரவாளிகளாக தங்கள் வாழுங்காலத்திற்கு தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களிடமிருந்து உத்தரவாதத்தைப் பெற்று தங்கள் வாழ்க்கையை மட்டும் உல்லாசமாக வாழ்ந்து முடிக்கின்றார்கள். 

பெற்றோர் பயிற்றுவித்த கல்வியில் வெற்றி கொள்ள முடியாமல், தாயின் நோக்கத்தை முறியடித்து,  'வேலையில்உடலுழைப்பு' என்ற தளத்தில் விழுந்து விட்டவர்கள் தமக்கும் பயனின்றி, தம் குடும்பத்திற்கும் பயனின்றி, தம் இனத்திற்கும் பயனின்றி விழலுக்கிறைத்த நீராய் வீணாய்ப் போகின்றனர்.

இளையராஜா அவர்கள் இசைத்துறையில் கால்பதிக்காமல் இருந்திருந்தால், தமிழ் படத்தில் கூட ஹிந்திப் பாடல்கள் தாம் எடுக்கப் பட்டு வந்திருக்கும் நிலை தற்போது இருந்திருக்கும். அந்த அளவிற்கு தமிழினம் இசைத்துறையில் வீழ்ச்சி அடைந்திருக்கும். இளையராஜா வரவுக்கு முந்தைய தமிழகத்தில்: விழாக்கள், நிகழ்ச்சிகள், திருமணம், வீடுகளில் ஹிந்திப் படப் பாடல்களே ஒலித்துக் கொண்டிருக்கும். இசைத்துறையில் தமிழை மீட்ட மாமனிதர் அவர்.

இளையராஜா அவர்கள் 'தனிப்புலமை' தளத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டதால் அவரும் வளர்ந்து அவர் குடும்பத்தையும் வளர்த்து, தமிழினத்தையும் வளர்த்தெடுத்தார்.

தனிப்புலமை.1, தொழில்.2, ஆகியவற்றில் தமக்கு இயல்பான ஒன்றில் தம்மைப் பிணைத்துக் கொண்டவர்களால்தாம் தொடர்ந்து தமிழும், தமிழினம் ஆகிய நாமும் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தனிப்புலமையாளர்களாலும், தொழில் முனைவோர்களாலும், வேளாண் பெருமக்களால் மட்டுமே தம்இனத்திற்கான தொன்மம் உருவாகும். 

வேலையாளர்களால் உருவாக்கப்படும் தொன்மம் அவர்களுக்கு வேலையளித்தவரின் இனத்திற்கே சென்று சேரும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,148.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.